Last Updated : 03 Jun, 2016 03:11 PM

 

Published : 03 Jun 2016 03:11 PM
Last Updated : 03 Jun 2016 03:11 PM

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2203 பள்ளி செல்லா குழந்தைகள்: கல்வி பெற நடவடிக்கைகளைத் தொடங்கியது எஸ்எஸ்ஏ

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 2203 பள்ளி செல்லா குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. அதில் அதிகபட்சமாக திருப்பூர் வட்டாரத்தில் மட்டும் 620 குழந்தைகள் கண்டறியப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் இரண்டு கட்டங்களாக பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப் புப் பணி நடைபெற்று வருகிறது. பள்ளிக்கல்வியை பாதியில் நிறுத்திய குழந்தைகளைக் கணக்கெடுத்து அவர்களுக்கு கல்விக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கும் நோக்கத்தில் இந்த பணி நடத்தப்பட்டு வருகிறது. 2016-17 கல்வியாண்டை முன்னிட்டு கோவை, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த ஏப்.5-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது.

இதில் அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பா சிரியர்கள், தன்னார்வலர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பள்ளி செல்லா குழந்தைகளைக் கணக்கெடுத்தனர்.

கோவை, திருப்பூரில் 3266 பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் கோவையில் 1213 பேரும், திருப்பூரில் 990 பேரும் என 2203 குழந்தைகள் பள்ளிக்கு செல்லா நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. ஜூன் 1-ம் தேதி முதல் கல்வியாண்டு தொடங்கியதை முன்னிட்டு, இக்குழந்தைகளுக்கு உடனடியாக கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை அனைவருக்கும் கல்வி இயக்கத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

அதில், பள்ளிகளுடன் இணைந்த இணைப்புப் பயிற்சி மையங்கள் மூலம் 1126 பேருக்கும், உண்டு உறைவிடப் பயிற்சி மையங்கள் மூலம் 450 பேருக்கும், தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் கீழ் உள்ள சிறப்புப் பள்ளிகளில் 422 பேரும், மாற்றுத்திறன் கொண்ட 148 மாணவ, மாணவிகளுக்கு வீடுகளிலிருந்தே கல்வியைத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் கூறும்போது, ‘இக்கணக்கெடுப்பில் கோவை வட்டாரத்தில் 123 பேர், மதுக்கரை வட்டாரத்தில் 52, பெரியநாயக்கன்பாளையத்தில் 74, பேரூர் வட்டாரத்தில் 108, எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் 125, தொண்டாமுத்தூரில் 80, ஆனைமலை 135, குடிமங்கலம் 43, கிணத்துக்கடவு 39, மடத்துக் குளத்தில் 67, பொள்ளாச்சி வடக்கில் 52, தெற்கில் 60, உடுமலை வட்டாரத்தில் 96, வால்பாறையில் 157, அன்னூரில் 39, அவிநாசியில் 44, காரமடையில் 94, பல்லடத்தில் 79, பொங்கலூரில் 41, சுல்தான்பேட்டையில் 54, சூலூரில் 51, திருப்பூரில் 620 பேர் என மொத்தம் 2203 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 2206 பேர் கண்டறியப்பட்டனர். இவ்விரண்டு வருடக் கணக்கெடுப்பிலும் பெரிய வித்தியாசங்கள் இல்லை.

பள்ளியிலிருந்து பாதியிலேயே நின்றவர்கள், வெளிமாநிலக் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்களே அதிகளவில் பள்ளி செல்லா நிலையில் உள்ளனர். இவ்விரண்டு மாவட்டங்களில் உள்ள 22 வட்டாரங் களில், திருப்பூர் வட்டாரத்தில் மட்டுமே மிக அதிக அளவில் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்’ என்றனர்.

போக்குவரத்து, பாதுகாப்பு

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் நீண்ட தொலைவிலிருந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இக்கல்வியாண்டில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 104 பள்ளிகளில் கல்வி பயின்று வரும் 1807 மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கு வந்து செல்ல போக்குவரத்து, பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாக அனைவ ருக்கும் கல்வி இயக்கத் திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x