வரதட்சணை கேட்டு கொடுமை: ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி மீது புகார்

வரதட்சணை கேட்டு கொடுமை: ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி மீது புகார்
Updated on
1 min read

ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதி, அவரது மனைவி, மகன் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்து வதாக ஒரு இளம்பெண் சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை நந்தனம் சிஐடி நகரை சேர்ந்த காவ்யா ராவ் (30) என்பவர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புதன் கிழமை காலையில் ஒரு புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

"ஆந்திர மாநில உயர்நீதி மன்ற நீதிபதியாக இருக்கும் சந்திரகுமாரின் மகன் ராமகிருஷ்ண னுக்கும், எனக்கும் 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு அனன்யா என்ற 3 வயது குழந்தையும் உள்ளது. எங்கள் திருமணத்தின்போது ரூ.43.50 லட்சம் வரதட்சணையாக கொடுத்தோம். இப்போது வீடு வாங்குவதற்காக மேலும் ரூ.50 லட்சம் வரதட்சிணையாக தருமாறு கேட்கின்றனர். இதற்காக பல நாட்கள் எனக்கு உணவு கூட கொடுக்காமல் கஷ்டப்படுத்தியுள்ளனர். என் கணவர் வேலைக்குகூட செல்வ தில்லை.

அவர்களின் கொடுமையை தாங்க முடியாமல் என் குழந்தையுடன் தந்தையின் வீட்டுக்கு வந்து விட்டேன். ஆனால் என்னையும், குழந்தையையும் எனது பெற்றோர் கடத்தி வைத்திருப்பதாக அவர்கள் மீது ஆந்திர மாநிலம் மேதக் மாவட்ட காவல் துறையில் புகார் கொடுத்தனர். சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் நான் குழந்தையை கடத்தி வந்து விட்டதாக புகார் கொடுத்துள்ளனர். நீதிபதி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி காவல் துறையினர் மூலம் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு காவ்யா கூறினார்.

வரதட்சணை புகார் குறித்து நீதிபதி சந்திரகுமாரிடம் கேட்டபோது, “நாங்கள் வரதட்சணை கேட்டு எந்த கொடுமையும் செய்யவில்லை. எனது மகன் பிஎச்டி செய்ய முயன்று கொண்டிருப்பதால் வேலைக்கு செல்லவில்லை. காவ்யாவுக்குதான் எங்களுடன் வாழ விருப்பமில்லாமல் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இதுகுறித்து தமிழக காவல் துறை டிஜிபி அலுவலகத்தில் ஏற்கனவே நாங்கள் புகார் கொடுத்திருக்கோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in