Published : 06 Nov 2013 05:55 PM
Last Updated : 06 Nov 2013 05:55 PM

இலங்கைச் சிறையில் 99 இந்திய மீனவர்கள்: தீவிரமடையும் ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது.

மீனவர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி, விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் நேற்று (செவ்வாய்கிழமை) கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 30 பேரையும் இம்மாதம் 19 வரை காவலில் வைக்க, அந்நாட்டு நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.

தற்போது, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள், புதுக்கோட்டையைச் சேர்ந்த 32 மீனவர்கள் மற்றும் காரைக்கால் மீனவர்கள் 32 பேர் இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 17 மீனவர்களையும், அவர்களின் 4 படகுகளையும், ராமேஸ்வரம் தீவைச் சேர்ந்த 13 மீனவர்களை 3 படகுகளையும் இலங்கை கடற்படை செவ்வாய்க்கிழமை கைது செய்தது.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 30 பேரையும் காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று மீனவர்களை விசாரித்தனர். பின்னர் யாழ்பாணம் மாவட்டம் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை விசாரித்த நீதிபதி கஜநிதி பாலன் நவம்பர் 19ம் தேதி வரை காவலில் வைக்க உத்திரவிட்டார். பின்னர் தமிழக மீனவர்கள் 30 பேரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

4 மீனவர்கள் விடுதலை

இதனிடையே, அக்டோபர் 3 அன்று நெடுந்தீவு அருகே நடுக்கடலில் நம்பு சேகரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் திடிரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டு பழுதடைந்துள்ளது. பின்னர் மீனவர்கள் நீச்சலடித்து நெடுந்தீவு அடைந்தனர். பின்னர் நெடுந்தீவு காவல்துறையினரிடம் சரணடைந்தனர். சரணடைந்த 4 மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

4 ராமேஸ்வரம் மீனவர்களும் புதன்கிழமை மீண்டும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களை விசாரித்த நீதிபதி மகேந்திரராஜன் மீனவர்கள் 4 பேரையும் அவர்களின் விசைப்படகையும் விடுவிக்க உத்திரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் ஓரிரு நாளில் தாயகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலவரையற்ற போராட்டம்

மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க, மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த வேண்டும்; இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களையும் அவர்களின் விசைப்படகுகளையும், இந்திய சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களை எவ்வித நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x