

நிலத்தடி நீர் இல்லாததால் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் வேளாண்மைக் கல்லூரி தொடங்க வாய்ப்பே இல்லை என்று ஜவுளித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று மீன்வளம் மற்றும் பால்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் இது தொடர் பாக நடைபெற்ற விவாதம்:
திமுக உறுப்பினர் உ.மதி வாணன் (கீழ்வேளூர்):
கடந்த திமுக ஆட்சியில் கீழ்வேளூரில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், கல்லூரி அமைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கு வேளாண்மை கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:
கீழ்வேளூரில் நிலத்தடி நீர் இல்லை. நிலத்தடி நீர் இல் லாத இடத்தில் வேளாண்மை கல்லூரி அமைக்க சாத்தியமே இல்லை.
உ.மதிவாணன்:
அமைச்சர் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர். வேதாரண்யம் தொகுதி உறுப்பினர். நாகை மாவட்டம் கீழ்வேளூரில் பல ஆறுகள் ஓடுகின்றன. விவசாயத்தை நம்பியுள்ள பகுதி. எனவே, இங்கு வேளாண்மைக் கல்லூரி அமைக்க முடியவில்லை எனில், வேறு எங்கு அமைக்க முடியும்?
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:
கடற்கரையிலிருந்து 30 கி.மீ. தொலைவுக்கு நிலத்தடி நீர் இல்லை என்பதை பல்வேறு ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கூறியுள்ளனர். எனவே, கீழ்வேளூரில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க சாத்தியம் இல்லை.
இவ்வாறு விவாதம் நடை பெற்றது.