

விழுப்புரம் அருகே ஒருதலைக் காதலால் இளைஞரால் தீ வைக்கப்பட்ட இளம்பெண் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். அவரிடம் நீதிபதி வாக்குமூலம் பெற்றுள்ளார்.
விழுப்புரம் இந்திரா நகரை சேர்ந்தவர் செந்தில் (30), தனியார் பேருந்து ஓட்டுநர். இவர் பள்ளி மாணவி ஒருவரை ஒருதலையாகக் காதலித்து வந்தார்.
இந்நிலையில் செந்தில் நேற்று முன்தினம் மாணவியின் வீட்டுக்கு சென்று, தன் மேல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு, அந்த மாணவியையும் கட்டிப்பிடித்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த செந்தில், சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
மேலும் பலத்த காயமடைந்த பள்ளி மாணவி மேல்சிகிச்சைக்காக கவலைக்கிடமான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றம் 4-ன் நீதிபதி பிரபு நேற்று முன்தினம் இரவு வாக்குமூலம் பெற்றுள்ளார். தீயில் கருகிய பள்ளி மாணவி தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த விழுப்புரம் தாலுகா போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.