

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 76 பேர் புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 76 பேரை அந்த நாட்டு கடற்படையினர் கைது செய்து, 36 பேரை அனுராதபுரம் சிறையிலும், 40 பேரை யாழ்ப்பாணம் சிறையிலும் அடைத்தனர்.
தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதங்கள் வாயிலாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார். இதனிடையே, செப். 27-ம் தேதி ஐ.நா. சபையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தினார்.
இந்த நிலையில், புதன்கிழமை யாழ்ப்பாணம், அனுராதபுரம் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 76 தமிழக மீனவர்களும் மன்னார், பருத்தித்துறை, ஊர்காவல்துறை ஆகிய நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள், ஓரிரு நாள்களில் தாயகம் திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்றக் காவல்
முன்னதாக, திங்கள்கிழமை இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 7 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 9 பேர் என மொத்தம் 16 மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை அக். 16-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தமிழக மீனவர்கள்.