Published : 22 Jan 2017 10:20 AM
Last Updated : 22 Jan 2017 10:20 AM

அவசரச் சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்த்தால் மட்டுமே ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர பாதுகாப்பு கிடைக்கும்: பொன்.முத்துராமலிங்கம் தகவல்

தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 31-பி பிரிவின் ஒன்பதாவது அட்ட வணையில் சேர்த்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தர சட்டப் பாதுகாப்பு பெற முடியும் என்று முன்னாள் அமைச்சரும் வழக்கறிஞருமான பொன்.முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டும் தமிழகத்தில் இளைஞர்களின் தன்னெழுச்சிப் போராட்டம் இன்னமும் தொடர்கிறது. அவசரச் சட்டம் தேவையில்லை. நிரந்தரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று போராட்டக்காரர்கள் உறுதியுடன் கூறிவருகின்றனர்.

அவசரச் சட்டத்தின் மூலமே ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர பாதுகாப்பு பெற முடியும் என்கிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். ஆனால், இது நிரந்தர தீர்வாகாது என்கிறார் பொன்.முத்துராமலிங்கம். இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

தற்போது தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தை வரும் 23-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முறைப்படி தீர்மானம் நிறைவேற்றி சட்டமாக்கி விடுவோம் என்கிறார் முதல்வர். ஆனால், அது மட்டுமே ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர பாதுகாப்பாக இருக்காது.

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலு வையில் உள்ளது. ஒரு வாரத் துக்குள் அந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு எதையும் வழங்க வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக் கொண் டுள்ளது. தற்போது தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தை பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு எடுத்துச் சென்று, ‘நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான தீர்ப்பு எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இப்படியொரு அவசரச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது. இது அரசியல் சட்டத்துக்கு புறம்பானது’ என வாதிட வாய்ப்பு இருக்கிறது. இந்த வாதத்தை ஏற்று, தமிழக அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யவும் சாத்தியம் உள்ளது.

1994-ல் தமிழக அரசு 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த சட்டம் இயற்றியபோது அந்தச் சட்டத்தை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 31-பி பிரிவு அட்டவணை ஒன்பதில் சேர்க்க வைத்தது. 9-வது அட்டவணையில் ஒரு சட்டம் சேர்க்கப்பட்டால் அதை எதிர்த்து கேள்வி கேட் கவோ, ரத்து செய்யவோ நீதிமன் றங்களுக்கு அதிகாரம் இல்லை. எனவேதான் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக யாரும் எதுவும் செய்ய முடியாமல் உரிய சட்டப் பாதுகாப்பு கிடைத்தது.

அதுபோல ஜல்லிக்கட்டு நடத்து வதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரச் சட்டத்தையும் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தந்து 9-வது அட்டவணையில் சேர்க்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். அப்படி சேர்த்துவிட்டால் ஜல்லிக்கட்டுக்கு எந்தக் காலத்திலும் யாராலும் தடை போட முடியாது.

இவ்வாறு பொன்.முத்துராமலிங்கம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x