ராமேசுவரம்: கடலின் நடுவே திருமண பேனர்; சமூக வலைதளங்களில் வைரலானது

ராமேசுவரம்: கடலின் நடுவே திருமண பேனர்; சமூக வலைதளங்களில் வைரலானது
Updated on
1 min read

ராமேசுவரம் அருகே கடல் நடுவே வைக்கப்பட்ட திருமண பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பேனர் கலாச்சாரம் அரசியல் கட்சி தொண்டர்களாலும், சினிமா ரசிகர்களாலும் பெரு நகரங்கள் முதல் பட்டி தொட்டியெல்லாம் பரவியது. இதன் தொடர்ச்சியாக பிறந்த நாள், காது குத்தல், மஞ்சள் நீராட்டு விழா, திருமணம், மரணம் என அனைத்து வகையான குடும்ப நிகழ்வுகளுக்கும் பொது மக்களே பேனர்கள் வைத்து தற்போது திக்குமுக்காட செய்து விடுகிறார்கள்.

இந்நிலையில் பாம்பன் பாலம் அருகே கடலின் நடுவே வைக்கப்பட்டுள்ள திருமண பேனர் ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களை கவர்ந்து வருகிறது.

பாம்பன் வடக்கு கடற்பகுதி பாக் ஜலச்ந்தி கடலின் நடுவே நங்கூரமிடப்பட்டுள்ள நாட்டுப்படகுகளின் மீது இந்த திருமண பேனர் வைக்கப்பட்டுள்ளது.

கொம்பன் பாய்ஸ் என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ள இந்த பேனரில் மணமக்களின் புகைப்படங்களுடன் மகிழ்வான தருணங்கள் மாறட்டும் இனிமையாக, நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும் இளமையாக என்ற வாழ்த்துச் செய்தியும் இதில் இடம் பெற்றுள்ளது.

நடைபாதைகள், சாலைகள், பள்ளிக் கல்லூரி பகுதிகள் என பொது மக்களுக்கு இடையூறு தருமாறு பேனர்களை வைக்காமல் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடலில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in