Published : 16 Feb 2014 01:00 PM
Last Updated : 16 Feb 2014 01:00 PM

முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்: தமிழக ஆம் ஆத்மி 3 நாளில் வெளியீடு

ஆம் ஆத்மி கட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ‘துடைப்பம் யாத்திரை’ சனிக்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் 3 நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதையடுத்து, மற்ற மாநிலங்களில் இக்கட்சிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஆம் ஆத்மி குறித்து தமிழக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங் களிலும் ‘துடைப்பம் யாத்திரை’ சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தமிழக மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.லெனின் கூறியதாவது:

தமிழகத்தில் மட்டும் ஆம் ஆத்மி கட்சியில் 2.75 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். இளைஞர்கள், பெண்கள் உள்பட அனைத்து தரப்பினரும் ஆம் ஆத்மியில் சேர ஆர்வமாக உள்ளனர். எங்கள் கட்சி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ‘துடைப்பம் யாத்திரை’ என்ற பெயரிலான பிரச்சாரம் இன்னும் ஒரு வாரம் மேற்கொள்ளப்படும்.

சென்னையில் நடந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும், அரிசி மீது மத்திய அரசு உயர்த்தியுள்ள சேவை வரியை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து 400க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களது விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக 15 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் 3 நாளில் வெளியிடப்படும்.

இவ்வாறு லெனின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x