Published : 03 Mar 2014 12:00 AM
Last Updated : 03 Mar 2014 12:00 AM

மீண்டும் போராட்டம்: சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற தேசிய மக்கள் கட்சி அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். போலீஸார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜீவ்காந்தி கொலை வழக்குக் குற்றவாளிகளை விடுதலை செய்ய காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த வாரம் போராட்டம் நடந்தது. அப்போது தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் திடீரென காங்கிரஸ் அலுவலகம் மீது கற்களை வீசித் தாக்கினர். காங்கிரஸாரும் பதிலுக்கு கற்களை வீசினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது. அண்ணா சாலை மற்றும் சுற்றுப்புற சாலைகளில் 3 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், சத்தியமூர்த்தி பவனை தேசிய மக்கள் கட்சி என்ற அமைப்பு ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிடப் போவதாக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், மாவட்டத் தலைவர்கள் மனோ, ரங்கபாஷ்யம் உள்ளிட்டோர் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர்.

இதற்கிடையில், போராட்டம் நடத்த வந்த தேசிய மக்கள் கட்சியினரை அண்ணா சாலையிலேயே தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்தனர்.

சத்தியமூர்த்தி பவன் அருகே ஏராளமான போலீஸார் குவிக்கப் பட்டனர். போலீஸார் அறிவுறுத்தியதன் பேரில், முன்னெச்சரிக்கையாக சத்தியமூர்த்தி பவன் கேட் பூட்டி வைக்கப்பட்டது. இதனால், சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

தேசிய மக்கள் கட்சி அமைப்பினர் போராட்டம் காரணமாக சத்தியமூர்த்தி பவன் நுழைவுவாயில் பூட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x