

நவீன கப்பல்கள் 14 நாட்கள் தேடியும் மாயமான விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆழ்கடலில் விமானம் விழுந் திருந்தால் அதை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம் என்று ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து அந்தமானுக்கு கடந்த மாதம் 22-ம் தேதி ஏ.என்-32 ரக ராணுவ சரக்கு விமானம் 29 பேருடன் புறப்பட்டு சென்றது. நடுவானில் பறந்தபோது அந்த விமானம் திடீரென மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணியில் போர்க்கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் எதிலுமே நம்பகமான தகவல்கள் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து கடலின் மேற்பரப்பில் விமானத்தைத் தேடும் பணி கடந்த 2-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.
தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்துக்குச் சொந்தமான ‘சாகர்நிதி’, மத்திய புவியியல் ஆராய்ச்சித் துறைக்குச் சொந்தமான ‘சமுத்திர ரத்னாகர்’ ஆகிய 2 ஆராய்ச்சிக் கப்பல்கள், ‘நிருபக்’ என்ற கடற்படை கப்பல், ஒரு நீர்மூழ்கிக் கப்பல் என 4 கப்பல்கள் மாயமான விமானத்தை ஆழ்கடலில் தேடும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளன. கடந்த 14 நாட்களாக இந்த கப்பல்கள் தேடியும் இதுவரை உறுதியான எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை. கப்பல்கள் நடத்திய தேடுதலில், 30-க்கும் அதிகமான மிதக்கும் பொருட்கள் மற்றும் 24-க்கும் அதிகமான சிக்னல்கள் கிடைத்துள்ளன. அவற்றை ஆய்வு செய்து பார்த்ததில் அவை அனைத்தும் மாயமான ஏ.என்.32 விமானத்துடன் தொடர்பு உடையவை இல்லை என்பது தெரியவந்துள்ளது. கப்பல்கள் தொடர்ந்து நடுக்கடலில் நிறுத்தப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
மாயமான விமானம் குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ஆழ்கடலுக்குள் கிடக்கும் விமானத்தை கண்டுபிடிக்கும் தொழில்நுட்ப வசதி நம்மிடம் இல்லை. விமானம் விழுந்திருப்பதாகக் கருதப்படும் இடம் சுமார் 4 ஆயிரம் மீட்டர் ஆழம் கொண்டது. தற்போது விமானத்தை தேடிக்கொண்டு இருக்கும் ஆராய்ச்சி கப்பல்கள் கூட இவ்வளவு ஆழத்துக்கு சென்று சோதனை நடத்தும் திறன் படைத்தவையா என்பது சந்தேகமே. 2 ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்குள் விழுந்த மலேசிய விமானம்கூட இதேபோல ஆழமான இடத்தில் விழுந்ததால்தான் அதை கண்டுபிடிக்க முடியவில்லை.
தற்போது கடலுக்குள் மாயமான விமானத்தை தேடிக் கொண்டிருக்கும் கப்பல்களில் இருக்கும் உணவு மற்றும் எரிபொருள் சில நாட்களில் காலியாகிவிடும். இதற்காக அந்த கப்பல்கள் மீண்டும் கரைக்கு வந்தாக வேண்டும்’’ என்றார்.