Published : 19 Mar 2014 12:00 AM
Last Updated : 19 Mar 2014 12:00 AM

சென்னை சாலைகளில் ‘ஒட்டு’ வேலைகள் தீவிரம்

புதிய சாலைகள் போட தேர்தல் நடத்தை விதிகளில் தடை இருப்பதால், ஓட்டை உடைசல் சாலைகளை சரிசெய்ய ஒட்டு போடும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள், பொதுமக்களிடம் வலுக்கட்டாயமாக பணம் பெறுவதாக புகார் கூறப்படுகிறது.

ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே 12-ம் தேதி வரை நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 9 கட்டமாக நடக்கிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 24-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அரசுத் துறைகள் மூலம் சாலை போடுவது, புதிய திட்டங்களை அறிவிப்பது, அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. எனவே, இத்தகைய பணிகளை அரசுத் துறைகள் நிறுத்தி வைத்துள்ளன.

அதேநேரம் பல மாதங்களாக கவனிக்கப்படாத சாலை பராமரிப்பு, கழிவுநீர்ப் பாதைகளை சீரமைப்பது போன்ற பணிகளை சென்னை மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது. ஓட்டை உடைசல் சாலைகளால் மக்கள் அதிருப்தியடைவதைத் தடுக்க, அவசர அவசரமாக சாலை ஒட்டு வேலைகள் நடந்து வருகின்றன. சென்னை எழும்பூரில் திருவேங்கடம் தெரு, சியாலி தெரு, மண்ணடி உள்ளிட்ட

பல இடங்களில் இந்த ஒட்டு வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

வாக்காளர்களை மறைமுகமாகக் கவரும் நோக்கில்தான் இந்த வேலைகளை மாநகராட்சியினர் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், சாலைப் பராமரிப்பில் ஈடுபடும் மாநகராட்சி ஊழியர்கள் வழக்கம்போல சம்பந்தப்பட்ட சாலையில் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர்களிடம் கட்டாயப்படுத்தி, ஒட்டு வேலைக்கு பணம் வசூலித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘விபத்துகளை தடுக்கும் வகையில் சாலைகளில் ஒட்டு வேலைகள் செய்வதற்கு தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் தடையில்லை. சாலை போடும் ஊழியர்கள் பணம் கேட்டு கட்டாயப்படுத்தினால், மாநகராட்சி அதிகாரிகளிடமோ, 044-25384530 / 25384670 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் மையத்துக்கோ,

044-25383692 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சாலைப் பராமரிப்பு தலைமை பொறியாளருக்கோ புகார் தெரிவிக்கலாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x