Published : 10 May 2017 07:58 AM
Last Updated : 10 May 2017 07:58 AM

நாமக்கல்லில் மர்மமாக இறந்த ஒப்பந்ததாரர் எழுதிய கடிதம் எங்கே? - போலீஸார் தீவிர விசாரணை

நாமக்கல்லைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் சுப்ரமணியம் எழுதிய கடிதம் எங்கே என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மோகனூர் சாலை ஆசிரியர் குடியிருப்பைச் சேர்ந்தவர் அரசு ஒப்பந்ததாரர் சுப்ரமணியம்(58). தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரான இவர், நேற்று முன்தினம் மோகனுார் அருகே அவருக்குச் சொந்தமான விவசாய தோட்டத்து வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அவரது உடல் நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது வயிற்றுப் பகுதியில் விஷம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என மோகனூர் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

வருமானவரி சோதனை

விசாரணை குறித்து போலீஸார் கூறியதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது அமைச்சர் விஜயபாஸ்கர், திரைப்பட நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நாமக்கல்லைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சுப்ரமணியம் வீட்டிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக அவருக்கு வருமான வரித் துறையினர் சம்மன் வழங்கினர். இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியிடம் வருமானவரித் துறையினர் விசாரணை நடத்திய அதேநாளில் சுப்ரமணிய மும் ஆஜராகியுள்ளார். பின்னர் மே 8-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறியுள்ளனர். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் இறந்துள்ளார்.

சம்பவத்தன்று சுப்ரமணியம் மட்டும் தனியாக தோட்டத்துக்குக் காரில் சென்றுள்ளார். அவர் சிறிய பையும், குளிர்பான பாட்டிலும் எடுத்து வந்ததாக தோட்டத்தில் பணிபுரியும் கூலித் தொழிலாளர்களான ஈரோடு கருமாண்டபாளையத்தைச் சேர்ந்த பெருமாள், ரத்தினம் தம்பதியினர் தெரிவித்துள் ளனர்.

தொடர்பில் இருந்தவர்கள்

சிறிது நேரத்தில் மயங்கிக் கிடந்த சுப்ரமணியத்தை, பக்கத்துத் தோட்ட உரிமையாளர் செல்வக்குமார், தனது காரில் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளார். எனினும், முன்கூட்டியே அவர் இறந்திருந் ததால், உடல் வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பின்னர் வீட்டில் இருந்து நாமக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதில், பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதனால், சுப்ரமணியத்தை கடைசியாக செல்போனில் தொடர்புகொண்ட நபர்கள் யார், அவருடன் தொடர்பில் இருந்தவர் கள் யார் என்பது குறித்தும் அவர்களது செல்போன் எண்களைக் கண்டறிந்து விசாரணை நடக்கிறது.

அதேவேளையில், அவர் கடந்த சில தினங்களுக்கு முன் தோட்டத்தில் உள்ள வீட்டில் கடிதம் ஒன்று எழுதியதாக பணியாட்கள் கூறியுள்ளனர். அந்த கடிதத்தைக் கைப்பற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த கடிதம் யாருக்காவது தபால் மூலம் அனுப்பப்பட்டதா என்ற கோணத் திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

வருமான வரித் துறை சோதனை நடந்த சமயத்தில் அவர் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்துள்ளார். எதற்காக அவர் அங்கு சென்றார் என்பது தொடர் பாகவும் விசாரிக்கப்படுகிறது. இடைத்தேர்தல் நேரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து பணப் பட்டுவாடா தொடர்பான விவரம் அடங்கிய பட்டியல் கைப்பற்றப்பட்டது. இதற்கான தொகையை சுப்ரமணியம் வழங்கி னரா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சுப்ரமணியம் குடும்பத்தினரிடமும் விசாரணை நடைபெறும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x