Published : 07 Feb 2017 06:15 PM
Last Updated : 07 Feb 2017 06:15 PM
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது, திமுகவை எந்த விதத்திலும் பாதிக்காது என்று கனிமொழி எம்பி தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று கனிமொழி பேசியதாவது:
தமிழகத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும், தமிழகம் எந்த திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றெல்லாம் பல கேள்விகள் தற்போது நம் முன்னால் நிற்கின்றன. இந்த கேள்விகளுக்கெல்லாம், உண்மையான, சரியான, தெளிவான பதில், ‘திமுக’ என்பதை மக்களும் உணர்ந்துள்ளனர்.
நிச்சயமாக உங்கள் உறுதுணையுடன், உங்கள் உழைப்போடு, சிறந்த செயல்பாட்டோடு மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தலைவர் கருணாநிதி வழிகாட்டுதலில் ஆட்சி அமையும். அந்த நாள் வெகு விரைவில் வரும். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகத்தின் முதல்வராக சசிகலா பொறுப்பேற்க உள்ளது குறித்து நிருபர்கள் அவரிடம் கேட்டனர். இதற்கு பதில் அளித்து கனிமொழி கூறும்போது, ‘‘இன்னொரு கட்சியில் நடைபெறக்கூடிய மாற்றங்களைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், நிச்சயமாக இந்த மாற்றங்கள் திமுகவை எந்தவிதத்திலும் பாதிக்காது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT