Published : 27 Mar 2014 11:59 AM
Last Updated : 27 Mar 2014 11:59 AM
ஜாமீனில் வெளிவரக் கூடிய குற்றச்சாட்டில் கைதான ஒருவர் ஜாமீன் கோரினால் கட்டாயம் அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ஒரு கொலை வழக்கில் சத்யா என்பவர் 7-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளி ஒருவரை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்று அவர் தப்பிக்க உதவி செய்தார் என்பது சத்யா மீதான குற்றச்சாட்டாகும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 212-ன் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்த சத்யா, கடந்த பிப்ரவரி 17-ம் தேதி முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சத்யா மனு தாக்கல் செய்தார். எனினும் அவரது மனுவை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதனை எதிர்த்து தனது வழக்கறிஞர் டி.ஆர்.ரவி மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சத்யா மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி பி.தேவதாஸ், “மனுதாரர் சத்யாவுக்கு ஜாமீனில் விடுதலை பெறுவதற்கான முழு உரிமை உள்ளது. ஆகவே அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்” என்று கடந்த மார்ச் 18-ம் தேதி உத்தரவிட்டார். “தண்டனைச் சட்டத்தின் பிரிவு 212-ன் படி ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்பது ஜாமீனில் விடுதலை ஆவதற்கு தகுதியான குற்றச்சாட்டே ஆகும்.
ஜாமீனில் விடுதலை ஆகத் தகுதியுள்ள குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்படும் போது, ஜாமீனில் விடுதலை பெற அவருக்கு உரிமை உள்ளது என்பதை சம்பந்தப்பட்ட குற்றவியல் அல்லது அமர்வு நீதிமன்ற நீதிபதி அவருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அவர் ஜாமீனில் விடுதலை ஆக விருப்பம் தெரிவித்தால் அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரர் சத்யா ஜாமீன் கோரி விண்ணப்பித்த நிலையில், அதனை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது சரியல்ல.
ஜாமீன் மனுவை நிராகரித்து தொடர்ந்து அவரை சிறையில் அடைத்திருப்பது சட்ட விரோதமானது ஆகும்.
ஆகவே, மனுதாரர் சத்யாவை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும். விசாரணைக்கு தேவைப்படும் நேரத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அவர் ஆஜராக வேண்டும்” என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT