

சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு கொழும்பு செல்லும் விமானத்தில் 2 பயணிகள், கணக்கில் இல்லாத ஹவாலா பணத்தை கடத்துவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அதிகாரிகள், விமானத்துக்குள் ஏறி சோதனையிட்டனர்.
சென்னையை சேர்ந்த முகமது (40) என்பவர் உட்பட 2 பேர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களது பை, சூட்கேஸ்களை சோதனையிட்டனர். அவற்றில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர், யூரோ கரன்சி மற்றும் இந்திய பணம் இருந்ததை கண்டுபிடித்தனர். இந்திய மதிப்பில் மொத்தம் ரூ.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் கணக்கில் காட்டப்படாத ஹவாலா பணம்.
அதிகாரிகளின் சோதனை காரணமாக அந்த விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக கொழும்பு புறப்பட்டு சென்றது.