Published : 31 Oct 2014 10:06 AM
Last Updated : 31 Oct 2014 10:06 AM
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், மின் சாதனங்களை பொதுமக்கள் பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த வழிமுறைகளை, மின் ஆய்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மின் ஆய்வுத் துறை அரசுத் தலைமை மின் ஆய்வாளர் எஸ்.அப்பாவு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வடகிழக்கு பருவ மழை தொடங் கியுள்ள நிலையில், மின்சாரம் தொடர்பான அசம்பாவிதங்களை தவிர்க்க, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதன்படி மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலம் மட்டுமே செய்யவேண்டும். மேலும் ஐ.எஸ்.ஐ. தர முத்திரையுள்ள தரமான மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மின்சார பிளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை அணைக்கவேண்டும்.
குளிர்சாதன பெட்டி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு, நில இணைப்புடன் (எர்த்) கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மின் இணைப்பு கொடுக்க வேண்டும். இதனை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைக்க வேண்டும்.
மின்கசிவு தடுப்பானை (ட்ரிப்பர்) பயனீட்டாளரின் இல்லங்களிலுள்ள மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்தி மின்கசிவால் ஏற்படும் மின் விபத்தை தவிர்க்கலாம். கேபிள் டிவி ஒயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டாம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வீட்டின் ஒயரிங்குகளை சோதனை செய்து தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ள வேண்டும்.
மின் கம்பத்துக்கு போடப்பட் டுள்ள ஸ்டே கம்பியின் மீது, கயிறு கட்டி துணிகளை காயவைப் பதை தவிர்க்க வேண்டும். குளிய லறையிலும், கழிப்பறையிலும் ஈர மான இடங்களிலும் சுவிட்சுகளைப் பொருத்த வேண்டாம்.
மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அலுவலர்களை அணுக வேண்டும். மின்சாதனங்களில் தீப்பிடித்தால் தீயணைப்பான்கள், உலர்ந்த மணல், கம்பளிப் போர்வை, உலர்ந்த ரசாயனப் பொடி அல்லது கரியமில வாயு ஆகியவற்றைக் கொண்ட தீயணைப்பு முறைகளை கையாள வேண்டும். மாறாக தண்ணீரைக் கொண்டு அணைக்க முயற்சிக்க வேண்டாம்.
இடி, மின்னலின் போது குடிசை வீடு, மரத்தின் அடியில், பஸ் நிறுத்தம் மற்றும் வெட்ட வெளி பகுதி, தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் இருக்காமல், கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம், அல்லது உலோகத்தால் மேலே மூடப்பட்ட வாகனங்களில் தஞ்சமடையலாம். இடி, மின்னல் நேரத்தில் டிவி, மிக்ஸி, கணினி, தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம். மழைக்காலமாக இருப்பதால் மின்சாதனங்களை எச்சரிக்கையுடன் பொதுமக்கள் கையாள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT