

புதுச்சேரியில் முதல்வர் ரங்க சாமிக்கு எதிராக செப்டம்பரில் அரசு கொறடா நேரு தலைமையில் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் பிரச்சினையைக் கிளப்பினர். இதையடுத்து அவர்களை முதல்வர் சமாதானப்படுத்தினார்.
இதையடுத்து ’ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ தொடர்பாக நவம்பரில் கொறடா நேரு அரசுக்கு எதிராக பிரச்சினையைக் கிளப்பினார்.
தற்போது டிசம்பரில் மீண்டும் அரசுக்கு எதிராகப் போராடுவேன் என அரசு கொறடா சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளார். இதன் விவரம்:
குடிமைப் பொருள் வழங்கல் துறையால் அத்தியாவசியப் பொருட்களைப் பெற பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாகப் புகார்கள் வருகின்றன. புதுவை அரசு பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் திட்டங்கள் மக்களை அடைய தாமதம் ஏற்படுகிறது.
மாநில அரசு வழங்கும் வெள்ளை அரிசி திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ‘ஸ்மார்ட் கார்டை’ குளறுபடி இல்லாமல் சரியாக பெற்றவர்கள் மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்களைப் பெற முடியும் என்ற நிலை உள்ளது.
ஒரு ஸ்மார்ட் கார்டில் 4 அல்லது 5 பேர் குடும்ப உறுப்பினர்களாக இருந்தால் அவர்களில் யார் ஒருவர் சென்றாலும் பொருட்களை வழங்க வேண்டும். குடும்பத் தலைவர்கள் தான் வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
பெரும்பாலான ஸ்மார்ட் கார்டு களில் குடும்பத் தலைவர் பெயர் இருக்கவேண்டிய இடத்தில் வேறு பெயரும், புகைப்படம் மாறுபட்டும் கைரேகைகள் மாறியும், பல குளறு படிகள் உள்ளன.
இத்தகைய சிரமங்கள் நிலவும் நிலையில் ஸ்மார்ட் கார்டில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய ஒவ்வொரு தொகுதியாக ரேஷன் கடைகள் மூலம் முழுமை பெறாத ஸ்மார்ட் கார்டுகளைக் கணக்கெடுத்து அத்தொகுதி களிலிலேயே முகாம்கள் நடத்தி குளறுபடிகளை சரி செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட பணி நிறைவடையும் வரை ரேஷன் பொருட்களைக் குடும்ப அட்டைகள் மூலம் மக்களுக்கு வழங்க வேண்டும். இதையும் மீறி பொதுமக்களை அலைக்கழித்தால் போராட்டம் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார் நேரு.
அரசு கொறடா குறை கூறி யுள்ளனர். குடிமைப் பொருள் வழங்கல் துறை முதல்வர் ரங்கசாமியின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.