

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் இயற்கை மரணத்துக்காக வழங்கப்படும் உதவித் தொகை ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
''பயிர் வளர்த்து, உயிர் வளர்க்கும் விவசாயப் பெருமக்களின் வாழ்வு வளம் பெற இந்த அரசு பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கும், சிறு/ குறு விவசாயிகளுக்கும், வாழ்க்கை முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு, "தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்" என்ற சமூக பாதுகாப்புத் திட்டம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் 15.8.2005 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில் புதிய, விரிவுபடுத்தப்பட்ட, சமூக பாதுகாப்புத் திட்டம் "முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்" என்ற பெயரில் 2011-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு செயலாக்கத்தில் உள்ளது.
இத்திட்டத்தில் உறுப்பினராகச் சேர்ந்துள்ள விவசாயிகள் மற்றும் விவசாயக் குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி உதவி, திருமண உதவி, மகப்பேறு உதவித் தொகை, முதியோர் ஊதியம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் விவசாய உறுப்பினராக பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இயற்கை மரணம் எய்தினால், அவர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில், உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டுள்ள அதிமுக அரசு, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரணத்திற்காக வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.10,000/-லிருந்து ரூ.20,000/- ஆக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்'' என்று கூறப்பட்டுள்ளது.