Published : 16 Apr 2017 03:04 PM
Last Updated : 16 Apr 2017 03:04 PM

40 ஆண்டுகளாக பதவி உயர்வே இல்லாமல் ஓய்வு: கால்நடை பராமரிப்புத் துறை உதவியாளர்களின் பரிதாப நிலை

30, 40 ஆண்டுகள் நாங்கள் பணி செய்தாலும், கடைசி வரை கால்நடை பராமரிப்பு உதவியாளர் என்ற நிலையிலேயே ஓய்வு பெறுகிறோம். எங்களுக்கு முறையாக பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கால்நடை பராமரிப்புத் துறை உதவியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் பன்முக மருத்துவமனைகள், கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள், கால்நடை கிளை நிலை யங்கள் செயல்படுகின்றன. இவற்றில் கால்நடை மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பணிபுரிகின்றனர்.

கால்நடை சிகிச்சையில் உதவி மருத்துவருக்கு உதவுவது, கால்நடை மருந்தகங்களை திறப்பது உள்ளிட்ட பணிகளை கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மேற்கொள்கின்றனர். இவர்களுக்கு, விடுமுறை, ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்டவை கிடைக்காததால் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதுகுறித்து கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சிலர் கூறியதாவது: எங்களுக்கு வார விடுமுறையே கிடையாது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட அரசு விடுமுறை நாட்களில் கூட நாங்கள் பணிக்கு வர வேண்டும். சிகிச்சை அளிக்கப்படும்போது, நாங்கள்தான் கால்நடைகளை கையாள்கிறோம். அப்போது நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறோம். ஆண்மை நீக்கம் செய்யப்படும்போது ஆடு, மாடுகளால் தாக்கப்படுகிறோம். கால்நடைகளின் காயங்கள் மற்றும் புண் போன்றவற்றை சுத்தம் செய்யும்போது தொற்று நோய் ஏற்படுகிறது. ஆனால், கால்நடைத் துறையில் பணியாற்றும் மற்றவர்களுக்கு வழங்குவதுபோல் ஆபத்து ஈட்டுப்படி எங்களுக்கு வழங்கப்படுவதில்லை.

30, 40 ஆண்டுகள் நாங்கள் பணி செய்தாலும், கடைசி வரை கால்நடை பராமரிப்பு உதவியாளர் என்ற நிலையிலேயே ஓய்வு பெறுகிறோம். ஊதிய விகிதாச்சாரத்திலும் புறக்கணிக்கப்படுகிறோம். எங்கள் நிலையை அமைச்சர், இயக்குநர், செயலர் போன்ற உயர் அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கால்நடை துறை மருத்துவத்துறை வட்டாரத்தில் கேட்டபோது, “கால்நடை பராமரிப்பு துறையில் பணிபுரியும் அனைவருமே ஆட்கள் பற்றாக்குறையால் விடுமுறையில்லாமல்தான் வேலை செய்யும்நிலை இருக்கிறது. மருத்துவர்கள், வாரத்தில் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ள அனுமதியிருந்தாலும் அருகில் உள்ள மற்றொரு மருந்தக மருத்துவர் கூடுதல் பொறுப்பாக பார்த்துக் கொள்ளும்பட்சத்தில் மட்டுமே விடுமுறை எடுக்க முடியும். உதவியாளர்களின் கோரிக்கைகளான ஊதிய உயர்வு, பதவி உயர்வு குறித்து அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x