Published : 14 Jun 2017 11:18 AM
Last Updated : 14 Jun 2017 11:18 AM

விவசாய கடன் தள்ளுபடி; மத்திய அரசு கைவிரிப்பது நியாயமல்ல: வைகோ

விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடிக்கு மத்திய அரசு உதவிட முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கைவிரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "வங்கிகளின் வாராக் கடன் குறித்து வங்கித் தலைவர்களுடன் ஜூன் 12 ஆம் தேதி ஆலோசனை நடத்திய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, "விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்வது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும். அவ்விதம் தள்ளுபடி செய்வதற்கான தொகையை மாநிலங்கள் தங்களது உள் வள ஆதாரங்கள் மூலம் திரட்ட வேண்டும். மத்திய அரசு நிதி உதவி அளிக்காது" என்று திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்.

விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடி செய்வதற்கு மத்திய அரசு, மாநிலங்களுக்கு உதவ முடியாது என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ள கருத்து மிகுந்த வருத்தம் அளிக்கிறது. பருவ மழை பொய்த்து, கடும் வறட்சியால் வேளாண்மைத் தொழில் முற்றாக நலிந்துவிடும் அபாயத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. கடன் சுமையைத் தாங்க முடியாமல் கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 200 விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

விவசாயக் கடன் தள்ளுபடி கோரிக்கையை முன்வைத்து மராட்டியம் மற்றும் மத்தியப் பிரதேச மாநில விவசாயிகள் கடந்த பத்து நாட்களாக போராடி வருகின்றனர். தமிழகத்தில் விவசாயிகளின் வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியிலும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சியை கருத்தில் கொண்டு மத்திய அரசு ரூ.39595 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், மத்திய அரசு சார்பில் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1748.28 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் தொகை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவோ, வறட்சி நிவாரணப் பணிகளுக்கோ போதுமானது அல்ல. இந்நிலையில், விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடி செய்வதற்கு மத்திய அரசு உதவ முடியாது என்று கை விரித்து விட்டது நியாயமானது அல்ல.

மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் வரி வருவாய் 32 விழுக்காடு அளவிலிருந்து 42 விழுக்காடு அதிகரிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது.

ஆனால், நிதி ஆயோக் வகுத்துள்ள புதிய விதிமுறைகளின்படி மக்கள் தொகை, வனப் பரப்பு மற்றும் வருமான அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதால், வளர்ச்சி பெற்ற மாநிலம் என்று தமிழகத்திற்கு 13 ஆவது நிதிக்குழு பரிந்துரைத்த நிதி ஒதுக்கீட்டின் அளவு 4.969 விழுக்கhட்டிலிருந்து, 14 ஆவது நிதிக்குழு பரிந்துரையில் 4.023 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு மத்திய வரிவருவாய் பகிர்ந்தளிக்கப்படுதில் பாரபட்சம் காணப்படுகிறது.

வங்கிகளின் வாராக் கடன் அளவு ரூ.6 இலட்சம் கோடி ரூபாயை தாண்டிவிட்டதால் வாராக் கடனை வசூலிப்பதற்கு ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரங்கள் அளித்து மத்திய அரசு இயற்றி உள்ள சட்டத்திற்கு கடந்த மே 2017 இல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக அருண் ஜெட்லி ஏற்கனவே தெரிவித்து இருந்தார். தொழில் அதிபர்களும், பெரு நிறுவனங்களும் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை வசூலிக்க முடியாததால், மத்திய அரசு கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை வழங்கி உள்ளது. பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று ஏமாற்றிவிட்டு, வெளிநாடு சென்றுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் வங்கிக் கடனை வசூலிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது.

இந்நிலையில் விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்தால் பணவீக்கம் அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கூறுவதும், விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடிக்கு மத்திய அரசு உதவிட முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்து இருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது. விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு மாநிலங்களின் நிதிச் சுமைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x