Published : 01 Jul 2016 02:28 PM
Last Updated : 01 Jul 2016 02:28 PM
முகநூல் மற்றும் வாட்ஸ்அப் பயன்படுத்தும் மாணவர்களின் பெற்றோர் அதிகம் கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும் என சேலம் மாநகர காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையைச் சேர்ந்த ஆசிரியை வினுபிரியாவின் புகைப்படம் மார்ஃபிக் செய்து ஆபாசமாக முகநூலில் வெளியிடப்பட்டது. இதில் மன உளைச்சல் அடைந்த வினுபிரியா தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சுரேஷ் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், முகநூல் மற்றும் வாட்ஸ்அப் பயன்படுத்தும் மாணவர்கள் மீது பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சேலம் மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பள்ளி, கல்லூரிக்கு செல்லும் தங்கள் குழந்தைகள் முகநூல், வாட்ஸ்அப் தனியாக கணக்கு தொடங்கி பயன்படுத்த பெற்றோர் அனுமதிக்க வேண்டாம். அவ்வாறு அனுமதித்தால், முன்பின் தெரியாதவர்கள் இணையதளம் மூலமாக உங்கள் குழந்தைகளை தொடர்பு கொண்டு, நல்லவர்கள் போல நயவஞ்சகமாக பேசி, ஆபாசப்படங்களை குழந்தைகளின் மனதை கெடுப்பதுடன், திருமண ஆசைகாட்டி, தனிமையில் சந்தித்து உங்கள் குழந்தைகளை ஆபாசப் படமெடுத்து அவர்களது வாழ்க்கையையே சீரழித்து விடுவர்.
மேலும், முகநூல் மற்றும் வாட்ஸ்அப் கணக்கு வைத்திருக்கும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், முன்பின் அறிமுகம் இல்லாதவர்களின் இணையதள அழைப்பை ஏற்று, அவர்களது பதிவுகளுக்கு ‘லைக்’ கொடுக்க வேண்டாம். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் குழந்தைகள் தனியாக கணக்கு வைத்திருக்க அனுமதிக்க வேண்டாம். அவர்கள் இணையதளத்தை வீட்டின் பொது அறையில் வைத்து பயன்படுத்த அனுமதியுங்கள்.
இணையதள வசதி செல்போன்களை வாங்கிக் கொடுக்காதீர்கள். உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதில் அக்கறை செலுத்துங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT