Published : 15 Jun 2016 08:05 AM
Last Updated : 15 Jun 2016 08:05 AM

சிறையில் அதிமுக பிரமுகர் மரணமடைந்த சம்பவம்: பேரவைத் தலைவர், அமைச்சர்கள் மீதான வழக்கை நாகை டிஎஸ்பி தொடர்ந்து விசாரிக்க உத்தரவு

சேலம் சிறையில் அதிமுக பிரமுகர் மரணமடைந்தது தொடர்பாக தமிழக சட்டப்பேரவைத் தலைவர், அமைச் சர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை நாகை டிஎஸ்பி தொடர்ந்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2007-ல் ஒரு போராட்டத் தில் ஈடுபட்டதற்காக அதிமுகவினர் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர். சிறையில் அதிமுக பிரமுகர் சுகுமார் என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

அப்போது அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்வகணபதி (தற்போது திமுகவில் உள்ளார்), தற்போதைய தமிழக சட்டப்பேரவைத் தலைவராக உள்ள ப.தனபால், அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலர் தடுத்துள்ளளனர். இதனால், குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாததால் சுகுமார் மரணமடைந்தார்.

அஸ்தம்பட்டி போலீஸார் இதை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அப்போது துணை ஜெயிலராக இருந்த கருப்பண்ணன், அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தற் போதைய சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள் உள் ளிட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டே வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சேலம் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ராமகிருஷ்ணன், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 2014 டிசம்பரில் உத்தரவிட்டது. ஆனால், அவர் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.

இவ்வாறு மனுவில் புகழேந்தி கூறியிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை விசாரித்த சேலம் காவல் உதவி ஆணையர் ராமகிருஷ்ணன் ஜூன் 14-ல் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தற்போது நாகப்பட்டினத்தில் டிஎஸ்பியாக பணியாற்றி வரும் ராமகிருஷ்ணன் நேரில் ஆஜராகி, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வருவதாக கூறினார். அதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த வழக்கை அவரே தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டார். மேலும், விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x