Published : 14 Jun 2016 08:09 AM
Last Updated : 14 Jun 2016 08:09 AM
திருவொற்றியூரில் ரூ.45 லட்சம் மருந்துப் பொருட்களுடன் கடத்தப்பட்ட கன்டெய்னர் லாரியை போலீஸார் மீட்டனர். லாரியை கடத்திய 7 பேரை கைது செய்தனர்.
சென்னை மயிலாப்பூர் பஜார் சாலையைச் சேர்ந்தவர் ஹரிபாபு (44). கன்டெய்னர் லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் 26-ம் தேதி இவரது கன்டெய்னர் லாரி மருந்து தயாரிப்பதற்கு தேவையான 1.5 டன் மூலப்பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. அதனை டிரைவர் வினோத் (24) ஓட்டிச் சென்றார். கன்டெய்னர் லாரி துறைமுகம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.
இரவு 10 மணியளவில் திருவொற்றியூர் அருகே சென்ற போது காரில் வந்த 7 பேர் டிரைவர் வினோத்தை தாக்கிவிட்டு கன்டெய்னரை கடத்திச் சென்று விட்டனர். இதுபற்றி கன்டெய்னர் லாரி உரிமையாளர் ஹரிபாபு கொடுத்த புகாரின்பேரில் திருவொற்றியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி லாரியை கடத்திய சுரேஷ், பாபு என்கிற புலிக்குளம் பாபு, ஜோசப், தாமஸ், யுகேஷ், ஜெகன் என்கிற ஜெகதீஷ்குமார், குபேரன் ஆகிய 7 பேரை கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் கீழனூர் கிராமத்தில் மறைத்து வைத்திருந்த ரூ.45 லட்சம் மருந்துப் பொருட்களுடன் கடத்தப்பட்ட கன்டெய்னர் லாரியை போலீஸார் மீட்டனர். பாபு என்கிற புலிக்குளம் பாபு மீது எண்ணூர் மற்றும் துறைமுகம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது தூண்டுதலில்பேரில் கன்டெய்னர் லாரி கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT