Published : 16 Aug 2016 09:12 PM
Last Updated : 16 Aug 2016 09:12 PM
தமிழகத்தில் எங்கும் கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லை என ஜவுளித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற ஜவுளி, தொழிலாளர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசியத திமுக உறுப்பினர் தா.மோ.அன்பரசன் (ஆலந்தூர்), ''தமிழகத்தில் சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் பெண்களை கொத்தடிமைகளாக வேலைக்கு வைத்துள்ளதாக செய்திகள் வருகின்றன. திருமணமாகாத பெண்களை 3 ஆண்டுகளுக்கு தங்க வைத்து தினமும் 12 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலை வாங்குவதாகவும், 3 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்த தொகையை கொடுத்து அனுப்புவதாகவும் கூறப்படுகிறது. எந்தவித பணி உத்தரவாதமும் இல்லாமல் உழைப்பைச் சுரண்டும் சுமங்கலித் திட்டம் நடைமுறையில் உள்ள நிறுவனங்களைக் கண்டறிந்து தமிழக அரசு தடுக்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்து ஜவுளித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:
தமிழகத்தில் எங்கும் கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லை. அதிமுக ஆட்சியில் கொத்தடிமை என்ற வார்த்தைக்கே இடமில்லை. ஆண்டுக்கு ரூ. 23 ஆயிரத்து 500 கோடி ஏற்றுமதி நடக்கும் திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களில் அதிகமான இளம்பெண்கள் பணியாற்றுகின்றனர்.
விடுதி உள்பட அவர்களுக்குத் தேவையான வசதிகளை பின்னலாடை நிறுவனங்களே செய்துள்ளன. தொழிலாளர்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ள தடை விதிக்கப்பட்டால் தான் அங்கு கொத்தடிமை முறை உள்ளது எனது பொருள். ஆனால், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் தொழிலாளர்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT