Published : 04 Mar 2017 01:17 PM
Last Updated : 04 Mar 2017 01:17 PM

மீனவர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு தகுந்த அழுத்தம் கொடுக்க தவறிவருகிறது: வாசன்

மீனவர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு தகுந்த அழுத்தம் கொடுக்க தவறிவருகிறது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் நாகை மற்றும் ராமேஸ்வரம் மாவட்டப் பகுதியில் இருந்து மீனவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை நாகை மற்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை சிறைபிடித்தும், 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்தும் சென்றனர். இலங்கை கடற்படையின் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை இலங்கை அரசு கண்டுகொள்வதில்லை. மத்திய பாஜக அரசும் தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து இலங்கை அரசை கண்டிப்பதும் இல்லை. இது தமிழக மீனவர் பிரச்சனையில் மத்திய பாஜக அரசு மெத்தனப்போக்கை கடைப்பிடிப்பதையே வெளிப்படுத்துகிறது. அதே சமயம் மீனவர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு - தமிழக அரசு தகுந்த அழுத்தம் கொடுக்க தவறிவருகிறது.

தமிழக அரசைப் பொறுத்தவரையிலே தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது. தமிழக அரசு - தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும், அனைத்து எம்.பி.க்களையும் அழைத்துப் பேசி ஒத்த கருத்தோடு, ஒருமனதாக டெல்லிக்குச் சென்று பிரதமரிடம் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.

ஏற்கெனவே இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும், தற்போது சிறைப்பிடிக்கப்பட்ட 13 மீனவர்கள் உட்பட மொத்தமுள்ள 53 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 123 படகுகளையும் மீட்க மத்திய பாஜக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு தமிழக - இலங்கை மீனவர்களுக்கு இடையே அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தை நடைபெறும் வரை இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது எந்தவித அராஜக நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்பதை இந்தியா - இலங்கையிடம் உறுதிப்பட தெரிவிக்க வேண்டும்.

தமிழக மீனவர் பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் சுமூகத் தீர்வு கண்டு, அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x