Published : 12 Sep 2016 09:16 AM
Last Updated : 12 Sep 2016 09:16 AM
உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, கர்நாடக மாநில அரசு தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் நீரை கடந்த 6-ம் தேதி முதல் திறந்துவிட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பதற்கு முன்னர் வரை மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக இருந்தது. கர்நாடகாவில் திறக்கப்பட்ட நீர் வந்து சேரத் தொடங்கியது முதல் மேட்டூருக்கான நீர்வரத்து முதல் நாளில் 7 ஆயிரம் கன அடியாகவும், மறு நாள் 15 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரித்து விநாடிக்கு 16,053 கன அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 41.22 டிஎம்சி-யாக உள்ளது. நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக அணையின் நீர்மட்டமும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 2 தினங்களுக்கு முன்னர் 76.74 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர் மட்டம் தற்போது 79.26 அடியை எட்டியுள்ளது. நீர்மட்டம் 80 அடியை எட்ட உள்ள நிலையில், டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து விரைவில் நீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிக அளவில் உள்ளதால், பரிசல் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 4-வது நாளாக நீடித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT