

சென்னை: விபத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களுக்கு நலவாரியம் மூலமாக ரூ.2 லட்சம் வரை நிவாரணம் வழங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன் வெளியிட்ட அரசாணை: பத்திரிகையாளர் நல வாரியக் குழுவின் 8, 9-வது கூட்டங்களில் பத்திரிகையாளர்களின் விபத்து மரண நிவாரணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், பத்திரிகையாளர் நலவாரிய நிதியில் இருந்து விபத்தால் மரணமடையும் பத்திரிகையாளர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும், இந்தத் தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து இல்லாமல், நலவாரிய நிதியில் இருந்தே அளிக்கவும் அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை கவனமுடன் பரிசீலித்த அரசு, அதையேற்று தற்போது அதிகாரப்பூர்வமாக அரசாணையை வெளியிட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.