

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வரை அவதூறாக பேசியதாக உதயநிதி ஸ்டாலினை போலீஸார் கடந்த 4-ம் தேதி கைது செய்து தஞ்சாவூர் அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதைக் கண்டித்து தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து அண்ணாசிலை வரை திமுகவினர் ஊர்வலமாக சென்றனர்.
இதற்கிடையே, பெண்களை இழிவாக பேசியதாக உதயநிதியை கண்டித்து, தவெக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்காக அண்ணாசிலை பகுதியில் வைக்கப்பட்டிருந்த தவெக கொடியை, திமுகவினர் பிடுங்கி எறிந்தனர். இதையடுத்து அங்கிருந்த திமுகவினருக்கும், தவெகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினரும் காலணி, கற்களை கொண்டு தாக்கிக் கொண்டனர். இதில் தவெக நிர்வாகிகள் சிலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தவெகவின் தஞ்சை மத்திய மாவட்டசெயற்குழு உறுப்பினரான மகாலட்சுமி அளித்த புகாரின்பேரில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மேயர் சண்.ராமநாதன், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஆர்.கே.நீலகண்டன், அண்ணபிரகாஷ், நிர்வாகிகள் ராஜா, மனோகர், சதீஷ், ராஜா சீனிவாசன், வயலுார் கார்த்தி உள்ளிட்டோர் மீது தஞ்சை கிழக்கு காவல் நிலையபோலீஸார் வழக்குப் பதிவு செய்து கவுன்சிலரும், கீழவாசல் பகுதி செயலாளருமான ஆர்.கே.நீலகண்டன், மருத்துவக் கல்லுாரி பகுதி திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வயலூர் கார்த்தி ஆகியோரை நேற்று கைது செய்தனர்.