Last Updated : 04 Feb, 2017 09:42 AM

 

Published : 04 Feb 2017 09:42 AM
Last Updated : 04 Feb 2017 09:42 AM

சட்டத்துக்கு ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்: நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பது நல்லது- தமிழக அரசு அதிகாரிகள் தகவல்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும் என்பதால், முன்னெச்சரிக்கை யாக நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண் ணப்பிப்பது நல்லது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் போக, மீதமுள்ள 85 சதவீதம் மாநில அரசுக்கு உள்ளது. அதேபோல் தனியார் (சுயநிதி) மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. அரசு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடத்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) இருந்து விலக்கு பெறும் வகையிலான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையில், நாடுமுழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல் லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-2018-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே மாதம் 7-ம் தேதி நடைபெறும். மாணவர்கள் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 31-ம் தேதி மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்தது. விண்ணப்பிக்க மார்ச் மாதம் 1-ம் தேதி என்ற காலக் கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பை நம்பி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருந்துவிடலாமா அல்லது நீட் தேர்வுக்கு விண்ணப்பிக் கலாமா என்ற குழப்பமான நிலையில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர்கள் உள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் 85 சதவீதம் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரி களில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங் களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறவே சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப் பட்டால்தான், இந்த சட்டம் செல்லத் தக்கதாக இருக்கும். நீட் தேர்வு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால் இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைப்பதில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

நீட் தேர்வு நடக்கும் தேதியும், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாளையும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கும்போது கிடைக்கட்டும், மாணவர்கள் காலம் தாழ்த்தாமல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது நல்லது. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்து விட்டால், கடந்த ஆண்டு போலவே பிளஸ் 2 தேர்வு அடைப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

ஒருவேளை, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், நீட் தேர்வு எழுதி அதன் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும். குறிப்பிட்ட காலத்திற்குள் சட்டத்திற்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைக்காவிட்டாலோ, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருந்துவிட்டாலோ மாணவர்கள் மருத்துவம் படிப்பது கேள்விக்குறியாகிவிடும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x