Published : 27 Sep 2013 10:21 AM
Last Updated : 27 Sep 2013 10:21 AM

டாக்டர் படுகொலை வீடியோவில் இருப்பது வழக்கறிஞரா?

டாக்டரை கொலை செய்தது வழக்கறிஞராக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வழக்க றிஞர் பாசிலின் புகைப்படத்தையும், கொலைக் காட்சிகளையும் தடயவியல் சோதனைக்கு போலீஸார் அனுப்பியுள்ளனர்.

துரைப்பாக்கம் குமரன் குடில் பகுதியைச் சேர்ந்த டாக்டர் சுப்பையா சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். அரசு மருத்துவமனையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அபிராமபுரம் பில்ராத் மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். கடந்த 14-ம் தேதி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த டாக்டர் சுப்பையாவை 2 பேர் வெட்டிக் கொன்றனர். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் டாக்டர் சுப்பையா கொலை செய்யப்பட்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் பாசில், அவரது சகோதரர் மோரிஸ் இருவரும் கடந்த 25ம் தேதி சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இருவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

டாக்டர் கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸாரிடம் கேட்டபோது, 'டாக்டர் சுப்பையாவை கொலை செய்யும் காட்சிகள் மருத்துவமனை எதிரே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

டாக்டரை அரிவாளால் வெட்டும் இரண்டு பேரில் ஒருவரின் உருவ அமைப்பு, சரண் அடைந்திருக்கும் வழக்கறிஞர் பாசிலைப் போலவே உள்ளது. இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. சந்தேகத்தை தெளிவுபடுத்த வழக்கறிஞர் பாசிலின் புகைப்படத்தையும், கண்காணிப்பு கேமராவில் பதிவான கொலைக் காட்சிகளையும் தடய வியல் சோதனைக்கு அனுப்பியுள்ளோம். இமேஜ் பிராஸசிங் முறையில் இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது. சிசிடிவி வீடியோ காட்சிகளின் பிக்சல் குவாலிட்டியை வைத்தே இதை உறுதிப்படுத்த முடியும். டாக்டர் கொலை வழக்கில் கிடைத்துள்ள வீடியோ காட்சிகள் பிக்சல் குவாலிட்டி குறைவாகவே உள்ளது. சிறையில் இருக்கும் வழக்கறிஞர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால்தான் உண்மை நிலவரம் தெரியவரும். இருவருக்கும் 5 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்திருக்கிறோம்.

குமரியில் இருக்கும் பாசிலின் குடும்ப உறுப்பினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடந்து வருகிறது. கொலை யாளிகளைப் பிடிக்க பெங்களூர் சென்ற 4 தனிப்படைகளை திருப்பி அழைத்து விட்டோம். வழக்கறிஞர்கள் பாசில், மோரிஸ் இருவரிடமும் போலீஸ் காவலில் விசாரணை நடத்தினால் கொலையாளிகள் யார் என்ற உண்மை தெரிந்துவிடும். பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

சென்னையில் அவசரமாக கூடி ஆலோசித்த போலீஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட பல வழக்குகளை கிளற முடிவு செய்துள்ளனர். இதற்காக தனி அதிகாரி ஒருவர் உடனடியாக நியமிக்க ப்பட்டுள்ளார். சென்னையில் மட்டும் இந்த ஆண்டு நடந்த கொலைகளில் 8 வழக்குகளில் வழக்கறிஞர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

குற்றவாளிகளை பிடிக்க உதவும் முக அடையாள முறை

டாக்டர் சுப்பையா படுகொலை வீடியோவை வைத்து போலீசார் ஆராய்ச்சி செய்துவரும் நிலையில் facial recognition system எனப்படும் ஒரு கணினி மென்பொருள் பயன்பாடு பற்றி சுவாரசியமான தகவலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த facial recognition system மூலம் கேமராவில் பதிவான ஒரு நபரின் முகத்தை ஏற்கெனவே காவல்துறையினரின் பதிவுகளில் உள்ள குற்றவாளிகளின் புகைப்படங்களோடு ஒப்பிட்டு குற்றவாளிகளை எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என்கின்றனர். குறிப்பிட்ட ஒரு குற்ற வழக்கில் தேடப்படும் நபரின் புகைப்படம் விசாரணை அதிகாரிகளின் வசம் இருந்தால் போதுமானது.

குறிப்பாக, ஏற்கெனவே குற்றங்களில் ஈடுபட்டவர்களாக இருந்தால் அவர்கள் புகைப்படம் அதிகாரிகள் வசம் இருக்கும்.முப்பரிமாண வடிவத்தில் இந்த பயன்பாடு இப்போது வடிவமைக்கப்பட்டிருப்பதால் எந்த கோணத்தில் இருந்தாலும் இது ஒரு முகத்தை சரியாக அடையாளம் காட்ட உதவும். அதே போல லைட்டிங் பிரச்னைகளும் இந்த பயன்பாட்டில் இருக்காது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த பயன்பாட்டின் அதிநவீன வடிவத்தை இன்னும் சில நாட்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்போவதாக கூறியிருக்கிறது.

மாறு வேடத்தில் இருக்கும் அல்லது முழுவதுமாய் மறைக்க கூடிய ஆடைகளை அணிந்திருக்கும் குற்றவாளிகளைக் கூட இந்த பயன்பாட்டின் மூலம் எளிதாக ஊடுருவி பழைய படத்துடன் ஒப்பிட்டு கண்டுபிடித்துவிடலாம் என்கிறது அந்த நிறுவனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x