Published : 12 Feb 2014 09:10 AM
Last Updated : 12 Feb 2014 09:10 AM

காஞ்சிபுரம் ஹோட்டல் அதிபர் வீட்டில் 135 சவரன் நகை கொள்ளை

காஞ்சிபுரத்தில் ஹோட்டல் அதிபர் வீட்டில் மர்ம நபர்கள் 135 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

காஞ்சிபுரம் எம்.எம்.அவென்யூவில் வசிப்பவர் ஜெயக்குமார் (58). பிரபல ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர். புதன்கிழமை நடைபெறவிருக்கும் அவரின் சகோதரர் இல்லத் திருமணத்துக்காக, வங்கி லாக்கரில் வைத்திருந்த 135 சவரன் தங்க நகைகளை கடந்த வாரம் வீட்டுக்கு எடுத்துவந்துள்ளார்.

இந்நிலையில், திங்கள்கிழமை, சகோதரர் வீட்டுக்கு சென்றுதிரும்பிய ஜெயக்குமார், இரவு வந்து பார்த்தபோது, வீட்டில் நகைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டி திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

ஜெயக்குமார், விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காஞ்சிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலசந்திரன் விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

திருட்டு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், நகையைத் திருடிச் சென்ற நபர், ஜெயக்குமார் குடும்பத்திற்கு நெருக்கமானவராக இருக்க வேண்டும். இவர் கள்ளச் சாவியைக் கொண்டு, வீட்டின் பிரதான கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றுள்ளார்.

அங்கு படுக்கை அறையின் கதவை நவீன கருவி கொண்டு அறுத்து, திறந்துள்ளார். பெட்டியையே தூக்கிச் சென்றுள்ளார். செல்லும்போது, வீட்டின் பூட்டை பூட்டிவிட்டும் சென்றுள்ளார். ஜெயக்குமார் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. திருடுபோன நகைகளின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கலாம். இத்திருட்டை விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x