Published : 18 Dec 2013 12:00 AM
Last Updated : 18 Dec 2013 12:00 AM

மெரினா கடலில் தத்தளித்த பெண்ணை காப்பாற்றிய ராணுவ அதிகாரி

மெரினா கடற்கரை அருகில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை ஜாக்கிங் சென்ற ராணுவ அதிகாரி காப்பாற்றினார்.

சென்னை மெரினா கடலில் கண்ணகி சிலை பின்புறம் உள்ள கடற்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை காலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே ஜாக்கிங் சென்ற ஒரு ராணுவ அதிகாரி உடனே கடலுக்குள் சென்று தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார். மயங்கிய நிலையில் இருந்த அந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை கொடுத்து, காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார் அந்த அதிகாரி. பின்னர் யாரிடமும் கூறாமல் அவர் அங்கிருந்து சென்று விட்டார். அவரது பெயர்கூட யாருக்கும் தெரியவில்லை.

அண்ணா சதுக்கம் காவல் துறையினர் விரைந்து வந்து அந்த பெண்ணை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். இப்போது நல்ல நிலையில் அவர் இருக்கிறார்.

இதுகுறித்து காவல் துறையினரிடம் கேட்டபோது, "சென்னை பெரம்பூர் அருகே அகரம் சாலவாயல் சாலையை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவரது மனைவி பத்மினி (40). இவர்களுக்கு ஆனந்தி, சாரதா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளாகவே கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இளைய மகள் சாரதா ஜனார்த்தனனுடனும், மூத்தமகள் ஆனந்தி பத்மினியுடனும் வசிக்கின்றனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினையில் அதிக மன அழுத்தம் அடைந்த பத்மினி தற்கொலை செய்ய முடிவெடுத்து கடலில் குதித்திருக்கார்.

அவரை தான் ராணுவ அதிகாரி காப்பாற்றி இருக்கிறார் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x