Published : 24 Mar 2014 09:17 AM
Last Updated : 24 Mar 2014 09:17 AM

5 மின் நிலையங்களில் உற்பத்தி பாதிப்பு இயந்திர கோளாறை சரிசெய்யும் பணி தீவிரம்: காற்றாலை மின் உற்பத்தி பூஜ்யம்

மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள 5 நிலையங்களில் இயந்திரக் கோளாறை சரி செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. காற்றாலைகளில் ஞாயிற்றுக் கிழமை காலை மின் உற்பத்தி முற்றிலும் நின்றுவிட்டாலும், விடுமுறை தினம் என்பதால் மின் வெட்டு நேரம் பெருமளவு குறைக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டு ஓரளவு குறைந்திருந்தது. இந்நிலை யில், கடந்த நான்கு நாட்களாக மீண்டும் கடுமையான மின்வெட்டு அமலாகியுள்ளது.

காற்றாலைக ளில் ஏற்பட்ட மின் உற்பத்தி சரிவு, மின் நிலையங்களின் கோளாறு காரணமாக மின் வெட்டை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சனிக்கிழமை வரை 5 மணி நேரமாக இருந்த மின்வெட்டு, ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரமாகக் குறைந்தது. சனிக் கிழமை சென்னையிலும் இரண்டு மணி நேரம் மின் வெட்டு அமலானது. ஆனால், ஞாயிற்றுக் கிழமை முழுவதுமாக மின்சாரம் வினியோகிக்கப்பட்டது. நகர்ப் பகுதிகளில் அரை மணி நேரமும், கிராமங்களில் ஒரு மணி நேரம் மின் தடை செய்யப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை காலை 7.50 மணி நிலவரப்படி, காற்றாலைகளில் ஒரு மெகா வாட் அளவுக்குகூட மின்சாரம் உற்பத்தியாகவில்லை. ஆனாலும், பெரும்பாலான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்கூடங்களுக்கு விடுமுறை தினம் என்பதால், பெரிய அளவில் மின்வெட்டு இல்லாமல் நிலைமை சமாளிக்கப்பட்டது.

தற்போதைய நிலைமை குறித்து மின் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஒவ்வொரு நாளும் வானிலை நிலவரத்தைப் பொறுத்து காற்றாலை மின் உற்பத்தி பெரிய அளவில் மாறுபடுகிறது. இதேபோல், வெப்ப நிலை அதிகமாகும்போது, அனல் மின் நிலையங்களிலும் பாய்லர் டியுப் கசிவு பிரச்சினை ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. எனவே, அந்தந்த நாளின் நிலவரப்படியே மின் வெட்டை அதிகரிப்பதும், குறைப்பதுமாக நிலைமையை சமாளிக்கிறோம்.

தற்போது, தமிழகத்துக்கு மின்சாரம் தரும் கைகா அணு மின் நிலையம் (220 மெகாவாட்), எண்ணூர் மின் நிலைய இரண்டாம் அலகு (60 மெகாவாட்), மேட்டூர் புதிய மின் நிலைய முதல் அலகு (600 மெகாவாட்), தூத்துக்குடி நிலைய முதல் அலகு (210 மெகாவாட்), நெய்வேலி விரிவாக்கம் 2-ம் அலகு (250 மெகாவாட்) ஆகியவற்றில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் நிலைமை சீராகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x