

திருவண்ணாமலை மாணவி பிரியதர்ஷிணியின் மருத்துவ படிப்புக் கட்டணத்தை எம்ஜிஆர் அறக்கட்டளையில் இருந்து வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னையில் சமீபத்தில் நடந்த மருத்துவக் கல்வி கலந்தாய்வில், திருவண்ணாமலை மாவட்டம், கண்ணக்குறுக்கையைச் சேர்ந்த பிரியதர்ஷிணி பங்கேற்றார். அவருக்கு சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தது. ஏழ்மை நிலையில் வாழும் தன் படிப்புக்கு நிதியுதவி வழங்கக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதை ஏற்று, எம்ஜிஆர் அறக்கட்டளை மூலம், பிரிய தர்ஷிணியின் படிப்புக்கான முழு செலவும் ஏற்கப்படுகிறது. மேலும், முதல் ஆண்டுக்கான கல்லூரி, விடுதி, புத்தகக் கட்டணம் உட்பட ரூ.1.10 லட்சம் வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.