முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகளில் முறைகேடு கண்டுபிடிப்பு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகளில் முறைகேடு கண்டுபிடிப்பு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
Updated on
1 min read

தமிழக முதல்வரின் ஒருங் கிணைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 346 மருத்துவமனை களில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளிக்க, பணம் வசூல் செய்வதற்கு தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் 22.1.2014-ல் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்று கூறி, தமிழக தலைமைச் செயலர், சுகாதாரத்துறைச் செயலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ரமேஷ் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. சுகாதாரத்துறை செயலரின் பதில் மனுவை கூடுதல் அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

அந்த பதில் மனுவில், ‘தமிழகத்தில் முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என் பதை கண்காணிக்க தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2012-16 காலகட்டத்தில், 346 மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் மருத்துவ முகாம்கள் நடத்தாதது, சேவைக் குறைபாடு மற்றும் சிகிச்சைக்காக பணம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த குறைபாடு தொடர்பாக 16 மருத்துவமனைகளிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 117 மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் விசாரணையை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

346 மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் மருத்துவ முகாம்கள் நடத்தாதது, சேவைக் குறைபாடு மற்றும் சிகிச்சைக்காக பணம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in