Published : 29 Dec 2013 11:00 PM
Last Updated : 29 Dec 2013 11:00 PM

இருதரப்பு மீனவர்கள் பேச்சுவார்த்தை: பிரதமருக்கு சரத்குமார் வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இருதரப்பு மீனவர்களையும் அழைத்து பேச பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ச.ம.க தலைவர் ஆர்.சரத்குமார் தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக மீனவர் பிரச்சினையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரையும், தொடர்ந்து, பிரதமரையும் தமிழகம் மற்றும் புதுவை மீனவ பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.

சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே நாகப்பட்டினத்தில் ச.ம.க சார்பில், தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்கப்படுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில், தமிழக மீனவர்களையும், இலங்கை மீனவர்களையும் அழைத்து பேசவைத்து, சுழற்சி முறையில் மீன்பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

வரும் ஜனவரி 20-ம் தேதி இரு நாட்டு மீனவர்கள் மற்றும் அரசுகள் இடையே டெல்லி அல்லது சென்னையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு வெளியுறுவுத்துறை அமைச்சரிடம் பிரதமர் கூறியுள்ளதாக மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதையும், அவர்களது உயிருக்கும் உடமைக்கும் சேதம் விளைவிப்பதையும், அவர்களது குடும்பத்தினர் அமைதியும் மகிழ்ச்சியும் இழந்து வாடுவதையும் இனியும் விளையாட்டாகக் கருதக் கூடாது. இருதரப்பு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவித்திருப்பதை உறுதியாக்கி, தமிழக மீனவர் பிரச்சினையை உண்மையான அக்கறையோடு முடிவுக்கு கொண்டுவர பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இங்கிலாந்து நாட்டுக்கும், அமெரிக்க நாட்டுக்குமிருக்கும் உணர்வை விட இந்தியாவிற்கு அதிக அக்கறையும், உணர்வும் இருக்கிறது என்பதை இதன் மூலம் மத்திய அரசு நிரூபிக்க வேண்டும்" என்று சரத்குமார் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x