Published : 17 Jan 2017 12:06 PM
Last Updated : 17 Jan 2017 12:06 PM

தொட்டபெட்டா மூலிகை பண்ணையில் உற்பத்தி புரட்சி: சாதனை படைக்கும் சுயஉதவிக் குழுவினர்

நீலகிரி மாவட்டத்தில் மலேரியா காய்ச்சலுக்கு மருந்து தயாரிக்க உருவாக்கப்பட்ட சின்கோனா தொழிற்சாலைகள் மூடப்பட்டதும், அத்துறையிலிருந்த பலர் வனத்துறைக்கு மாற்றலாகினர்.

மூலிகைப் பண்ணை

ஆனால், அதில் பாதிக்கப்பட்ட சிலர் செய்வதறியாமல் திகைத்த போது, கடந்த 1994-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் தொட்ட பெட்டா மூலிகைப் பண்ணை. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 195 ஏக்கர் நிலப்பரப்பில், மலைச் சிகரத்துக்கு அருகே இப் பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது. இதில், சுமார் 30 ஏக்கரில் 150 ரகங்களிலாலான மூலிகைச் செடிகள் வளர்க்கப்படுகின்றன.

ஒற்றை தலை வலிக்கான உடனடி நிவாரணியில் இருந்து, புற்றுநோய் வரை பல்வேறு வகையான பிரச் சினைகளுக்கும் மருந்து தயாரிக் கப் பயன்படும் மூலிகைகள் இம் மையத்தில் உள்ளன. அதேபோல் கற்பூர தைலம், யூகாலிப்டஸ் தைலம், ஜெரேனியம், மூட்டு வலிக்கு மருந்தாகப் பயன்படும் தைலம், கூந்தல் செழித்து வளர்வதற்கான தைலம், புத்துணர்வுக்கான தைலம் என பல்வேறு மூலிகை தைலங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இம்மையத்தில், தற்போது 60 பேர் பணிபுரிகின்றனர். 5 மகளிர் சுயஉதவிக் குழுக்களாகவும், ஓர் ஆடவர் சுய உதவிக்குழுவாகவும் பிரிந்து செயலாற்றுவதால், கிடைக் கும் லாபத்தில் பங்குதாரர்களாகவும் உள்ளனர். வனத்தைப் பாதுகாக்கும் பணியிலும், மூலிகைகளை உற்பத்தி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ள இவர்களது ஆண்டு வருவாய் சுமார் ரூ.60 லட்சம்.

இதுதொடர்பாக இம்மையத்தின் வழிகாட்டுநரான கே.உதயகுமார் கூறும்போது, “இந்தியாவில் சிறப்பாக செயல்படும் மூலிகைப் பண்ணைகளில், தொட்டபெட்டா மூலிகைப் பண்ணையும் ஒன்று. இங்கு உற்பத்தி செய்யப்படும் தைலம் தொண்டை வலிக்கும், கல்தேரியா மூட்டு வலிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

மேலும், சினரேரியா உள்ளிட்ட கண் மற்றும் டிஜிட்டாலிஸ் இதய நோய்க்கும் மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. இங்கு வளர்க் கப்படும் மூலிகைகள் பற்பசை தயாரிப்பு நிறுவனங்களுக்கும், லெமன் வர்டினா வயிற்று உபாதைகளுக்கும், லெமன் கிராஸ் சோப்பு மற்றும் அழகு சாதன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பயன்படுகின்றன.

சேஜ் பிட்சா, ஒயின் தயாரிக்கவும், ஓரகானோ சிட்ரனெல்லா பூச்சி விரட்டியாகவும், பேராகன், லெமன் பாலம், பார்சிலி ஆகிய உணவுப் பொருள் தயாரிப்பிலும் முக்கியப் பொருட்களாக விளங்குகின்றன. இதை வாங்குவதற்கு மருந்து, அழகு சாதனம், உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.

தற்போது 14 வகையான மருத்துவ மூலிகைகள் வணிக ரீதியாகவே உற்பத்தி செய்யப் படுகின்றன.

அத்துடன் சில்வர் டாலர், சில்வர் பேபி உள்ளிட்டவை வெளி அலங்காரங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இம்மையத்தின் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகளை, நீலகிரி மாவட்ட வடக்கு வனக்கோட்டம் செய்து வருகிறது” என்றார்.

வடக்கு வனச்சரகர் கே.சரவணகுமார் கூறும்போது, “தொட்டபெட்டா மூலிகைப் பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் தைலங்கள், வெளி இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x