Last Updated : 16 Nov, 2013 10:46 AM

 

Published : 16 Nov 2013 10:46 AM
Last Updated : 16 Nov 2013 10:46 AM

அரசு பொது மருத்துவமனையில் விரைவில் அம்மா உணவகம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் அம்மா உணவகத்துக்கான பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. இதை முதல்வர் ஜெயலலிதா விரைவில் திறந்து வைக்கிறார்.

சென்னை மாநகராட்சி சார்பில் 200 வார்டுகளில் தலா ஒன்று வீதம் செயல்பட்டு வரும் 200 அம்மா உணவகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளிலும் அம்மா உணவகத்தை தொடங்க மாநகராட்சி திட்டமிட்டது.

அதன்படி, முதல்கட்டமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 6 ஆயிரம் சதுர அடியில் அம்மா உணவகம் தொடங்குவதற்கான பணிகள் கடந்த மே மாதம் தொடங்கியது. தற்போது அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளன.

இதுதொடர்பாக மருத்துவ மனையின் டீன் வி. கனகசபை கூறியதாவது: அம்மா உணவகப் பணிகள் 99 சதவீதம் முடிந்துவிட்டது. மீதமுள்ள ஒரு சில பணிகளும் இன்னும் 2 வாரத்தில் முடிந்துவிடும். இந்த உணவகத்தை விரைவில் முதல்வர் திறந்து வைக்க உள்ளார். உணவகத்தில், காலையில் இட்லி, பொங்கலும், மதிய வேளைகளில் சாம்பார் சாதம், தயிர் சாதம், மூலிகை சாதமும் வழங்கப்படும். மாலையில் சப்பாத்தியும் விற்பனை செய்யப்படும். முதல் முறையாக ரூ.2-க்கு டீ விற்பனையும் செய்யப்பட உள்ளது.

சமையலுக்கு தேவையான கிரைண்டர், மிக்சி மற்றும் பாத்தி ரங்கள் அனைத்தும் வந்து விட்டன. உணவுகள் அனைத்தும் நீராவி மூலம் தயாரிக்கப்படும். 7 நிமிடத்தில் சுமார் 1,000 இட்லி உற்பத்தி செய்யப்பட உள்ளன. ஒரே நேரத்தில் 400 பேர் சாப்பிடலாம். இதற்காக 40 பெரிய டேபிள்கள் போடப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் வீல் சேரில் எளிதாக வந்து செல்ல உணவகத்தில் சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

உணவகத்தின் வெளியே சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் நிலையம் அமைக்கப்படுகிறது. உணவகத்துக்குத் தேவையான இடம், தண்ணீர், மின்சாரம் போன்றவற்றை மருத்துவமனை நிர்வாகம் வழங்கியுள்ளது. அம்மா உணவகத்தின் மூலம் மருத்துவ மனைக்கு வரும் ஏழை-எளிய மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x