

மூடப்பட்டக் மதுக்கடைகளை குடியிருப்புப் பகுதிகளில் திறக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலும், அதையொட்டி 500 மீட்டர் தொலைவிலும் அமைந்திருந்த மதுக்கடைகளை தமிழக அரசு மூடியிருக்கிறது.
ஆனால், மூடப்பட்டக் மதுக்கடைகளை குடியிருப்புப் பகுதிகளில் திறக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
அனைத்துக் குற்றங்களுக்கும், சீரழிவுகளுக்கும் மது தான் மூலகாரணமாக இருப்பதால் மதுவை முழுமையாக ஒழித்து தமிழகத்தை மதுவில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அந்த இலக்கை எட்டும் நோக்கத்துடன் தான் உயர்நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை போராடி சாலையோரங்களில் 3321 மதுக்கடைகளை மூட வைத்திருக்கிறது.
ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட 604 மதுக்கடைகளையும் சேர்த்தால் பாட்டாளி மக்கள் கட்சி மூலமாக மட்டும் 3,925 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
சாலையோரங்களில் மதுக்கடைகள் இருப்பதால் சாலைவிபத்துக்களும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன என்பதால் தான் இந்த வழக்கை வழக்கறிஞர் பாலு மூலம் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
நெடுஞ்சாலைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள மதுக்கடைகளை மூடுவதையும், முழு மதுவிலக்கையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. தமிழகத்தில் முழுமதுவிலக்கை ஏற்படுத்துவதற்கான முதல் நடவடிக்கையாகவே இதைப் பார்க்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்கு அப்பாலும், சில இடங்களில் 220 மீட்டருக்கு அப்பாலும் மதுக்கடைகளை அமைக்கத் தடையில்லை என்றாலும், மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசாக இருந்தால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு 3321 மதுக்கடைகளையும் முழுமையாக மூடுவதற்கு அரசு முன்வந்திருக்க வேண்டும்.
ஆனால், நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட மதுக்கடைகளை மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் மீண்டும் திறப்பதன் மூலம் மக்கள் நலனில் தங்களுக்கு அக்கறையில்லை; மது விற்பனையும், அதன்மூலம் கிடைக்கும் வருமானமும் தான் முக்கியம் என்பதை அரசு சொல்லாமல் சொல்லியிருக்கிறது.
சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட மதுக்கடைகளை குடியிருப்புப் பகுதிகளில் திறக்கும் அரசின் திட்டத்தை மக்கள் நினைத்தால் எளிதாக முறியடிக்க முடியும். 2003-ஆம் ஆண்டில் மதுக்கடைகளை அரசுடைமையாக்கிய தமிழக அரசு அவசர அவசரமாக தனியார் கட்டிடங்களில் தான் மதுக்கடைகளை திறந்தது.
இப்போது மூடப்பட்ட 3321 மதுக்கடைகளையும் புதிதாக திறக்க வேண்டுமெனில், மக்களுக்கு சொந்தமான கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து தான் நடத்த முடியும். இத்தகைய மதுக்கடைகளுக்கு வாடகைக்கு இடம் தர மறுப்பதன் மூலம் புதிய மதுக்கடைகள் திறப்பதை எளிதில் தடுக்க முடியும்.
மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்று கூறி தான் அரசு மதுவை விற்பனை செய்கிறது. இந்த வசனத்தை திரும்பத் திரும்பக் கேட்டு புளித்துப் போய்விட்டதாலோ என்னவோ, அது மக்கள் மனதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. உண்மையில் மது தான் அனைத்துக்கும் கேடு என்பதையே அந்த வாசகம் உணர்த்துகிறது.
மதுக்கடைகளை திறக்க வாடகைக்கு இடம் கொடுக்க நினைப்பவர்கள் அந்த வாசகத்தை தங்கள் மனதில் ஒருமுறை உச்சரித்துப் பார்த்து அதனால் ஏற்படும் பாதிப்புகளை நினைத்துப் பார்த்து முடிவெடுக்க வேண்டும். வாடகைக்கு ஆசைப்பட்டு குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகள் அமைக்க இடம் கொடுத்தால், மதுக்கடைகள் வழியாக செல்லும் தங்கள் குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தில் வாழும் சகோதரிகளும் பாதிக்கப்படலாம் என்பதை உணர்ந்து புதிய மதுக்கடைக்கு வாடகைக்கு இடம் தருவதை சமூகப் பொறுப்புள்ள மக்கள் தவிர்க்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளை அமைக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் பலமுறை தீர்ப்பளித்திருக்கிறது. அதையும் மீறி மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை அமைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை மக்கள் தன்னெழுச்சியாக திரண்டு தடுக்க வேண்டும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சாலையோரங்களில் இருந்து அகற்றப்பட்ட மதுக்கடைகளை குடியிருப்புப் பகுதிகளில் திறப்பதை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சியினர் அறத்தின் வழியிலும், சட்டத்தின் வழியிலும் போராடி வருகின்றனர். இந்த நடவடிக்கைகளை பா.ம.க.வினர் தீவிரப்படுத்த வேண்டும்.
மதுவுக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் தொடரும். தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறையாகும் வரை பாட்டாளி மக்கள் கட்சி ஓயாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு அவர் கூறியுள்ள்ளார்.