Last Updated : 27 Sep, 2016 02:53 PM

 

Published : 27 Sep 2016 02:53 PM
Last Updated : 27 Sep 2016 02:53 PM

திருச்சியில் அதிமுக வெற்றி பெற்றால் மேயர் பதவி யாருக்கு?- கட்சியினரிடம் எதிர்பார்ப்பு அதிகரிப்பு

அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானதற்குப் பிறகு, தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் யாருக்கு மேயர் பதவி கிடைக்கும் என்று அதிமுகவினர் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளுக்குமான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது.

கடந்தமுறை நேரடி தேர்தல் முறையில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.ஜெயாவுக்கும், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து, பின்னர் வேட்பாளர் மாற்றத்தால் வாய்ப்பை இழந்த கட்சியின் மகளிரணி மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழரசிக்கும், தமாகாவிலிருந்து விலகி அண்மையில் அதிமுகவில் இணைந்த மாநகராட்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமானுக்கும் இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி மேயர் பதவி பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக வெற்றி பெற்றால், சமபலத்துடன் இருப்பதாகக் கருதப்படும் இவர்கள் 3 பேரில் யார் மேயராக வருவார் என்று இப்போதே அதிமுகவினர் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“மேயராக பணியாற்றிய அனுபவம், மாநகராட்சிக்கு பல்வேறு விருதுகளை பெற்றுத் தந்ததுடன், பெரிய அளவில் சர்ச்சையில் சிக்காதவர் என்பதால்” அ.ஜெயா ஆதரவாளர்களும், “கவுன்சிலராக பணியாற்றிய அனுபவம், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட கிடைத்த வாய்ப்பு நழுவியதால் இப்போது நல்ல வாய்ப்பு கிடைக்கும்” என்று எஸ்.தமிழரசி ஆதரவாளர்களும், “8 ஆண்டுகள் திருச்சி மாநகராட்சி மேயராக இருந்த அனுபவமும், கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால்” சாருபாலா தொண்டைமான் ஆதரவாளர்களும் நம்பிக்கையுடன் உள்ளனர்.

அதேவேளையில், இப்போது பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் மனைவிக்கு சீட் பெற்ற சிலரும், மேயர் பதவிக்கு குறிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x