இலங்கைத் தமிழர்களுக்கான தமிழக அரசின் ஆதரவு தொடரும்

இலங்கைத் தமிழர்களுக்கான தமிழக அரசின் ஆதரவு தொடரும்
Updated on
1 min read

இலங்கைத் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கு, தமது உறுதியான ஆதரவு தொடரும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழக சட்டப் பேரவையின் ஆளுநர் உரையில், இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக இடம்பெற்றுள்ளவை:

"இலங்கையில் இனவெறிப் போருக்குப் பிறகு இலங்கைத் தமிழர்கள் அவர்கள் பிறந்த மண்ணிலேயே மனிதாபிமானமற்ற முறையில் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுவதும், இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் இனப் படுகொலைகளுக்கு இலங்கை அரசைப் பொறுப்பேற்கச் செய்யத் தவறியதும், இம்மாநிலத்தில் உணர்ச்சிகரமான பிரச்சினைகளாக உள்ளன.

சிறுபான்மைத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனிதாபிமானமற்ற கொடுமைகளுக்கு இலங்கை அரசைப் பொறுப்பேற்கச் செய்யவும், இலங்கைத் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமையையும், அடிப்படை உரிமைகளையும் பெற்றுத்தரவும், நான்கு முறை இம்மாமன்றம் தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, பாரதப் பிரதமருக்கு இப்பிரச்சினை குறித்து வலியுறுத்தி பலமுறை கடிதம் எழுதியுள்ளார்கள். முதல்வர் தமிழ் மக்களின் கொந்தளிப்பான உணர்வு நிலையை மத்திய அரசுக்குத் தெரியப்படுத்திய பின்னரும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கான தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்.

இலங்கையில் உள்ள சிறுபான்மைத் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தருவதற்கு, இந்த அரசு உறுதியான ஆதரவைத் தொடர்ந்து அளிக்கும்" என்று ஆளுநர் ரோசய்யாவின் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in