

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1,000 ரூபாய் மதிப்புடைய "அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்", வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை விதி 110-ன் கீழ் வாசித்த முதல்வர்: ""அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்", குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்குத் தேவையான பராமரிப்புத் துண்டு, குழந்தை உடை, குழந்தை படுக்கை, குழந்தை பாதுகாப்பு வலை, குழந்தை நாப்கின், 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா, பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பூ, சோப்புப் பெட்டி, சோப்பு, நக வெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, சுத்தமான கைகளுடன் குழந்தையை பராமரிக்க பிளாஸ்டிக் டப்பாவில் 250 மில்லி லிட்டர் அளவு கை கழுவும் திரவம் ஆகியன இருக்கும்.
பிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு, பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தாய்ப்பாலை அதிகரிக்கவும் ‘சௌபாக்கியா’ சுண்டிலேகியம், தாய் மற்றும் பச்சிளம் குழந்தையைப் பராமரிக்க தேவையான பொருட்களை வைத்துக் கொள்ள ஒரு பெட்டகம் என 16 பொருட்களை உள்ளடக்கியதாகும்.
நடப்பு ஆண்டில் இத்திட்டத்திற்கு 67 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இதனால் 6.7 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவர்" என்றார்.