Published : 28 Jun 2017 09:13 AM
Last Updated : 28 Jun 2017 09:13 AM

இரட்டை இலை சின்னமும், கட்சிக் கொடியும் ஓபிஎஸ் அணிக்கு கிடைக்கும்: முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன்

இரட்டை இலை சின்னமும், கட்சிக் கொடியும் ஓபிஎஸ் அணிக்கு கிடைக்கும். சசிகலாவால் அதிமுக சிதைந்து கிடக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசினார்.

ஓபிஎஸ் அணியான, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசும்போது, ''தமிழகத்தில் வாக்கு வங்கி அதிகம் உள்ள ஒரே கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுகவைத் தவிர எந்தக் கட்சியாலும் திமுகவை வீழ்த்த முடியாது. திமுக ஊழல் கட்சியாக உள்ளது. சசிகலா அணியினரை ஓரங்கட்டி வைக்கவே ஓபிஎஸ் தலைமையில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி உருவாக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் முதல்வராக வர முடியாது. ஏனென்றால் அவரைவிட சிறந்த தலைவராக ஓ.பன்னீர் செல்வம் திகழ்கிறார். ஜல்லிக்கட்டு, வார்தா புயல் நேரங்களில் சிறப்பாக ஓபிஎஸ் செயல்பட்டார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. அதனால் தான் பொதுமக்கள் அறியும் வகையில் விசாரணை நடத்தச் சொல்கிறோம். சசிகலாவை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும். இரட்டை இலை சின்னமும், கட்சிக் கொடியும் ஓபிஎஸ் அணிக்கு கிடைக்கும். சசிகலாவால் அதிமுக சிதைந்து கிடக்கிறது. வரும் ஜூலை 9-ல் ராமநாதபுரம் அரண்மனை முன்பு ஓபிஎஸ் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது'' என்றார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x