காரைக்குடியில் விசாரணைக் கைதி மர்ம மரணம்: போலீஸார் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் புகார்

காரைக்குடியில் விசாரணைக் கைதி மர்ம மரணம்: போலீஸார் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் புகார்
Updated on
1 min read

தங்க நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நகை பட்டறைக்காரர் சுப்பிரமணியன் மர்மமான முறையில் நேற்று உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஆத்தங்குடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (50). இவர் இதே ஊரில் தங்க நகைப்பட்டறை தொழில் செய்து வந்தார்.

இதே ஊரில் கடந்த ஜன. 31-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த ராமநாதன் என்பவர் மனைவி வள்ளிக்கண்ணு (74) மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகைகள், தங்க வளையல்கள், மோதிரம் திருடுபோயின. இதுகுறித்து குன்றக்குடி போலீஸார் விசாரித்து வந்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக சுப்பிரமணியனை குன்றக்குடி போலீஸார் இரு நாட்களுக்குமுன் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மூதாட்டி கொலை வழக்கில் தொடர்புடையதை அவர் ஒப்புக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். அவரது வீட்டிலிருந்து சில நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், வழக்கில் தொடர்புடைய செல்போனை திருச்சியில் உள்ள உறவினரிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த செல்போன் மற்றும் சில பொருட்களை மீட்பதற்காக நேற்று அதிகாலை சுப்பிரமணியன், மகன் ரத்தினக்குமார் (18), நகைப்பட்டறையில் வேலை பார்க்கும் தொழிலாளி சண்முகம் ஆகியோரை குன்றக்குடி போலீஸார் வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது காரைக்குடியை அடுத்த தேத்தாம்பட்டி அருகே சென்றபோது சுப்பிரமணியன் நெஞ்சுவலிப்பதாக கூறியுள்ளார். அவரை உடனடியாக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது, பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது உறவினர்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றவரை போலீஸார் அடித்துக் கொலை செய்ததாக புகார் தெரிவித்தனர். அவர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக காரைக்குடி நகைக்கடை உரிமையாளர்கள் கடை அடைப்பு செய்தனர். இவர்களோடு போலீஸார், வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனிடையே, சுப்பிரமணியன் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மர்ம மரணம் குறித்து காரைக்குடி மாஜிஸ்திரேட் மகாலெட்சுமி விசாரணை மேற்கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in