Published : 17 Dec 2013 10:50 AM
Last Updated : 17 Dec 2013 10:50 AM

மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும்: பேரணி நடத்த அமைச்சரிடம் மனு

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தித் தரவேண்டும் என்று வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகளுக்கான சங்கம் சார்பில் அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.

உதவித் தொகை உயர்வு, 3 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சென்னையில் திங்கள்கிழமை பேரணி நடத்தினர். அண்ணா சாலை தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் இருந்து கோட்டை நோக்கி புறப்பட்ட பேரணியை சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்சிராணி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

அரசின் உதவித் தொகையைப் பெறும் மாற்றுத் திறனாளிகளின் குடும்பச் சொத்து மதிப்பு ரூ. 5 ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது.மாத வருமானம் ரூ. 2 ஆயிரம் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற கடுமையான விதிமுறைகள் உள்ளது.

இதை நீக்கி, 40 சதவீத ஊனம் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மற்ற மாநிலங்களைப் போல் உதவித் தொகை வழங்க வேண்டும். தற்போது வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை ரூ. 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அடையாள அட்டை வைத்துள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசின் சலுகைகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பேரணி முடிவில் ஜான்சிராணி தலைமையில் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்துக்கு சென்று சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். உதவித் தொகையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் கூறியதாக ஜான்சிராணி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x