Published : 26 Mar 2017 03:10 PM
Last Updated : 26 Mar 2017 03:10 PM

இலங்கையில் அல்லலுறும் தமிழர்களுக்காக அரசியல்வாதிகள் ஒன்றும் செய்யவில்லை: லைக்கா நிறுவனம் சாடல்

இலங்கையில் அல்லலுறும் தமிழர்களுக்காக தமிழக அரசியல்வாதிகள் ஒன்றும் செய்யவில்லை என்று லைக்கா நிறுவனத்தின் துணைத்தலைவர் பிரேம் சிவசாமி சாடியுள்ளார்.

லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை சார்பில் இலங்கையின் வவுனியாவில் கட்டப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துகொள்வதாக இருந்தது. இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துகொள்ளக் கூடாது என்று திருமாவளவன், வைகோ, வேல் முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். பாமக நிறுவனர் ராமதாஸும் இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்துகொள்ளக் கூடாது என்று கூறி அறிக்கை விடுத்திருந்தார். அவர்களின் வேண்டுகோளை ஏற்று, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்தார்.

மேலும், இனிவரும் காலங்களில் இலங்கை செல்வதை அரசியலாக்கி அங்கு என்னை போகவிடாமல் செய்துவிடாதீர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், ரஜினியின் பயணம் ரத்தானதால் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவிருந்த வீடு வழங்கும் விழாவை ரத்து செய்வதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் தமிழர்களுக்காக கட்டப்பட்ட 150 வீடுகளும் அவர்களிடமே ஒப்படைக்கப்படும் என்றும் லைக்கா கூறியுள்ளது.

இது தொடர்பாக லைக்கா நிறுவனத்தின் துணைத்தலைவர் பிரேம் சிவசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், ''இலங்கையின் வடக்கு மாகாணத்தின் வவுனியா பிரதேசத்தின் சின்ன அடம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் பகுதியில், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் சார்பில், 'லைக்கா ஞானம் கிராமம்' உருவாக்கப்பட்டது. இந்தக் கிராமத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட 150 வீடுகளை லைக்கா ஞானம் அறக்கட்டளை உருவாக்கியிருந்தது.

அகதி முகாம்களில் வாழ்ந்த 150 குடும்பங்களுக்கு இந்த வீடுகளை கையளிக்கும் விழா, எதிர்வரும் ஏப்ரல் 10-ம் தேதி, நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில், கலந்துகொள்ளுமாறு ரஜினிக்கு அழைப்பு விடுத்திருந்தோம். அந்த வகையில் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சந்திப்பதற்கும் விருப்பம் தெரிவித்திருந்தார்.

இதற்கமைவாக ஏப்ரல் 9-ம் தேதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருந்த பிரமாண்டமான நிகழ்வில் கலந்து கொள்வதற்கும், புதிதாக உருவாக்கப்பட்ட வீடுகளுக்கான உறுதிப் பத்திரங்களை வழங்கி வைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான, ஞானம் அறக்கட்டளையின், அடுத்தக்கட்ட உதவித்திட்டங்களை, அறிவிக்கவும் திட்டமிட்டு இருந்ததோடு, ரஜினிகாந்த் இரண்டு நாட்கள் வடக்கு கிழக்கில் தங்கியிருக்கவும் விருப்பம் கொண்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் திருகோணமலை, மட்டக்களப்பு பிரதேசங்களுக்கும் நேரில் சென்று மக்களை சந்திக்கவும், ஆவலாக இருந்தார்.

ஆனால் அவரின் இலங்கைப் பயணம் குறித்து, தற்போது சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், ஒரு அறக்கட்டளையின் உதவித்திட்ட செயற்பாடுகளை, தமது அரசியல் சுய லாபத்திற்காக பயன்படுத்துகின்ற ஒரு அநாகரீக சூழல் உருவாகியிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் ரஜினியை தர்மசங்கடமான நிலைக்கு உட்படுத்தும் நிலை வலிந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அசௌகரியங்களை தவிர்க்கும் முகமாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித் திட்டங்கள், இவற்றின் ஊடாக தடைப்படக் கூடாது என்பதற்காகவும், 9-ம் தேதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற இருந்த அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்படுவதோடு ரஜினிகாந்தின் இலங்கைப் பயணமும் ரத்துச் செய்யப்படுகிறது என்பதனை மிகவும் மனவேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனினும் திட்டமிட்டபடி பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பினையும், விருப்பத்தினையும், பூர்த்தி செய்யும் நோக்கத்துடன், வீடுகள் அனைத்தும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என்பதனையும் லைக்கா ஞானம் அறக்கட்டளை தெரிவித்துக் கொள்கிறது.

இதேவேளை இந்த தருணத்தில் சில விஷயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எங்களுக்கும் முன்னய ஆட்சியாளரான ராஜபக்சேவுக்கும் தொடர்புகள் இருப்பதாக வதந்திகளையும், புனை கதைகளையும் உருவாக்கியவர்கள் எமது வர்த்தக சாம்ராஜ்ஜியத்திற்கு எதிரான போட்டியாளர்கள் என்பது உலகறிந்த விஷயம்.

இப்படியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்பதோடு எந்தவொரு ஆதாரமுற்றவை.அதனால் எமது வர்த்தக செயற்பாடுகளோடும், சமூகம் சார்ந்த முன்னுதாரண திட்டங்களோடும் ஆரோக்கியமான போட்டிகளை உருவாக்க முடியாதவர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கைகளை தொடர்கின்றனர்.

இப்படியான வதந்திகளை பரப்புவதன் ஊடாக லாபத்தை பெற முனைபவர்களுக்கு சார்பாக, சில தமிழக அரசியல்வாதிகள் திரும்ப திரும்ப பேசுவது கண்டிக்கப்பட வேண்டியது. அத்துடன் எமது போட்டி வியாபாரிகளிடம் ஏதாவதொரு வகையில் கடமைப்பட்ட காரணத்தினால்தான் இப்படியான ஆதாரமற்ற , உண்மையற்ற வதந்திகளை இவர்கள் முன்வைக்கிறார்கள் என்பதனை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இத்தகைய அரசியல்வாதிகள் இன்று இலங்கையில் அல்லலுறும் தமிழ் மக்களின் வாழ்வுக்கும் அவர்களின் எதிர்கால நன்மைக்கும் எதுவும் செய்ததில்லை. ஆயினும் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நோக்கம் எல்லாம் அரசியல் தவிர்த்து அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கும் நிரந்தர உறைவிடத்துக்கும் உதவி செய்வதே ஆகும்.

இதேவேளை இலங்கை தமிழ் மக்களுக்கு நீண்டகால அரசியல் தீர்வை உருவாக்கி கொடுப்பதற்கு பல அரசியல் தலைவர்கள் கடுமையான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதனை நாம் மனதார வரவேற்கிறோம். ஆனால் இன்றைய நிலையில், அனைத்தையும் இழந்து அல்லலுறும் மக்களுக்கு உதவுகின்ற எம்முடைய முயற்சிகளை நிம்மதியாக செய்ய விடுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்'' என்று பிரேம் சிவசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x