Published : 10 Feb 2017 10:49 AM
Last Updated : 10 Feb 2017 10:49 AM

ஊழல் செய்யும் அமைச்சர்கள் தான் சசிகலாவை சுற்றியுள்ளனர்: கோவை முன்னாள் மேயர் ராஜ்குமார் குற்றச்சாட்டு

ஊழல் செய்யும் அமைச்சர்களே சசிகலாவைச் சுற்றியுள்ளனர். காலப் போக்கில் உண்மையை உணருபவர்கள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மாறுவார்கள் என கோவையின் முன்னாள் மேயர் ப.ராஜ்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தான் முதல்வராக நீடிக்க வேண்டும். ஜெயலலிதாவால் 2 முறையும், அவர் மறைந்த பிறகு 3-வது முறையாகவும் முதல்வராக பதவியேற்று பல முக்கிய பிரச்சினைகளை சிறப்பாக கையாண்டுள்ளார். அவரை சசிகலா நடத்தியவிதம் வருத்தமளிக்கிறது.

சசிகலா முதல்வராவதை அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் அதிமுகவின் பொதுச்செய லாளராக பதவி ஏற்றதையே கட்சித் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது அவரைச் சுற்றி ஊழல் செய்த அமைச்சர்கள் தான் உள்ளார்கள். அவர்களில் உண்மையை உணருபவர்கள் காலப்போக்கில் பன்னீர்செல்வத்தையே ஆதரிப்பார்கள்.

கோவையை பொறுத்தவரை அதிமுகவில் உள்ளவர்கள், அதிருப்தியில் ஜெ.தீபா பேரவையில் இணைந்தவர்களும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக திரண்டிருக்கிறார்கள். மாநகரின் 100 வார்டுகளிலும் அவருக்கு ஆதரவு பெருகுகிறது. எத்தனை பேர் ஆதரவளிக்கிறார்கள் என்பதை விரைவில் தெரிவிப்போம்.

சென்னையில் கூட்டம் நடப்பதாக அழைத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்களை சசிகலா தரப்பு கடத்தியுள்ளது. அவர்கள் செல்போன்களை அணைத்து வைத்துள்ளனர்; குதிரை பேரம் நடக்கிறது. இந்த நிலை தொடராது. அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். கடத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டால் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கான உண்மையான ஆதரவு தெரியும். பன்னீர்செல்வத்துக்கு ஆதரவானவர்களைத் திரட்டி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x