

அம்மா உணவகம, அம்மா குடிநீர் திட்டம் தேவையான அற்புதமான திட்டமாகும். அம்மா உணவகங்களுக்கு விரைவில் அரசு மானியம் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் சாத்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் பேசும் போது, ''அம்மா உணவகத்துக்கு செலவழிப்பது யார்? சாதாரண மக்களின் பணம் தானே? நகராட்சிகள், மாநகராட்சிகளில் நிதிப் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நேரத்தில் அம்மா உணவகம், அம்மா குடிநீர் தேவைதானா என்பதை பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் அரசே நிதியை தரவேண்டும்'' என்றார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் எஸ்.பி,வேலுமணி, ''தமிழகம் முழுவதும் 658 அம்மா உணவகங்கள் உள்ளாட்சி அமைப்புகளின் நிதியின் மூலம் செயல்பட்டு வருகின்றன. கடந்த 10 நாட்களுக்கு முன் முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது அரசு மானியம் வழங்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான அரிசியை உணவு வழங்கல் துறையில் இருந்து பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. அம்மா உணவகம, அம்மா குடிநீர் திட்டம் தேவையான அற்புதமான திட்டமாகும். இத்திட்டத்தில் இதுவரை 41 கோடியே 67 லட்சம் இட்லி, 15 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு கலவை சாதம், 19 லட்சத்து 56 ஆயிரம் சப்பாத்தி ஆகியவை விற்கப்பட்டுள்ளன''என்றார்.