Published : 27 Apr 2017 12:19 PM
Last Updated : 27 Apr 2017 12:19 PM
கேரள மின் துறை அமைச்சர் எம் எம் மணி மீது கேரள அரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவில் மூணாறு தேயிலை தோட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக கேரள மின் துறை அமைச்சர் எம் எம் மணிக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் எம் எம் மணிக்கு எதிராக கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். இது குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள ஜி.கே.வாசன், நாட்டின் முன்னேற்றத்துக்கும் வீட்டின் முன்னேற்றத்துக்கும் பெரிதும் துணை நிற்பவர்கள் பெண்கள்,அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அனைவரின் கடமையாகும் என்று தெரிவித்துள்ளார்.
இப்படி ஒரு நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது அமைச்சர் ஒருவர் அவதூறாக பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது, அது குறித்து கேரள அரசோ அவர் சார்ந்த கட்சியோ எந்த கருத்தையும் கூறாமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்றும் வாசன் தெரிவித்துள்ளார்.
இதனால் மணியின் பேச்சுக்கு அவர் சார்ந்திருக்கும் கட்சியும் கேரள அரசும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT